இறந்தவரின் கல்லீரலை திருடிய மருத்துவர்கள்: கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்! June 15, 2023 9:05 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முயற்சிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறி, அவரது கல்லீரலை விதியை மீறி அகற்றி வெளிநாட்டினர் ஒருவருக்கு பொருத்தி அநியாயம் நடந்துள்ளது. இது தொடர்பாக கேரள ஆஸ்பத்திரி மீதும், டாக்டர்கள் மீதும் கோர்ட்டு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் டாக்டர்கள். ஆனால் கேரளாவில் டாக்டர்கள் நடத்தி உள்ள ஒரு பெரிய தில்லுமுல்லுவை ஒரு டாக்டரே கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு சென்று, குற்றம் செய்த ஆஸ்பத்திரி, டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க காரணமாகி இருக்கிறார். இதுபற்றிய பதைபதைக்க வைக்கும் தகவல்கள் வருமாறு:- கேரளாவில் 2009-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி, அபின் என்பவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது, ஒரு மின்கம்பத்தில் மோதி விபத்து நேரிட்டது. இதில் அவரது தலையில் படுகாயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் கொத்தமங்கலம் மார் பேஸ்லியஸ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் லேஷோர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். டிசம்பர் 1-ந் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாகவும், அவரது முக்கிய உறுப்புகள் அகற்றப்பட்டதாகவும், அவரது கல்லீரல் வெளிநாட்டு நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டதாகவும், நாளிதழ்களில் செய்தி வெளியானது.அதில் சட்டத்தை மீறி, தவறாக சித்தரித்து, பாதிக்கப்பட்டவரின் பெற்றோரின் ஒப்புதலைப் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தியைப் பார்த்து கொல்லத்தைச் சேர்ந்த டாக்டர் கணபதி என்பவர் அங்குள்ள குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில், விபத்தைச் சந்தித்தவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாகக்கூறி விதிகளை மீறி அவரது உறுப்புகள் பெறப்பட்டு, கல்லீரல் வெளிநாட்டினர் ஒருவருக்கு பொருத்தப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இருந்தார்.வழக்கை மாஜிஸ்திரேட்டு எல்டோஸ் மேத்யூ விசாரணைக்கு ஏற்றார். முதல் கட்ட விசாரணையில் வழக்குதாரரின் புகாரில் அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கண்டறிந்து, இதில் விதிமுறை மீறிய தனியார் ஆஸ்பத்திரி மற்றும் அதன் 8 டாக்டர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாஜிஸ்திரேட்டு முடிவு செய்துள்ளார். குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பவும் அவர் உத்தரவிட்டார். இது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் கூறி உள்ளதாவது:- இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மனித உறுப்புகள் மாற்றச்சட்டம், 1994-ன்கீழ், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு அடிப்படை ஆதாரமும், போதுமான முகாந்திரங்களும் உள்ளன.இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் இறந்த தனியார் ஆஸ்பத்திரி, விபத்துக்குப் பிறகு அவர் அழைத்துச் செல்லப்பட்ட 2 ஆஸ்பத்திரிகளின் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மீதான குற்றச் சாட்டின் மீது விசாரணை நடத்தப்படும். விபத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரின் மண்டை ஓட்டில் இருந்து ரத்தத்தை வெளியேற்றினால் அவரது உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும், ஆனால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்ற 2 ஆஸ்பத்திரிகளில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டாலும், ரத்தத்தை வெளியேற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட நபருக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை செய்வதற்கு அல்லது ரத்தத்தை வெளியேற்றுவதற்கு திட்டமிடுவதற்கு முன்பே, எர்ணாகுளம் லேஷோர் ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மூளைச்சாவு நடந்துள்ளதாக அறிவிப்பதற்கு முன்பாகவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் விபத்தில் சிக்கிய நபரைப் பார்த்துள்ளனர். அவரது கல்லீரல் செயல்படுகிறதா என்பது பற்றி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மூளைச்சாவு நடந்துள்ளதாக அறிவிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு கட்டாயமாக நடத்த வேண்டிய மூச்சுத்திணறல் சோதனை நடத்தப்படவில்லை.விபத்தைச் சந்தித்த நபர் மூளைச்சாவு அடைந்ததாக வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ், விதிமுறைப்படி இல்லை. இந்த இறப்பு சான்றிதழில் கையெழுத்து போட்டுள்ள டாக்டர்கள் சட்டப்படி கையெழுத்து போடுவதற்கு அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. விபத்தில் பாதிக்கப்பட்டவரின் கல்லீரல் உள் அங்கீகாரக் குழுவின் அனுமதியைப் பெறாமல், வெளிநாட்டினர் ஒருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எர்ணாகுளம் லேஷோர் ஆஸ்பத்திரி மற்றும் நடந்துள்ள குற்றத்தில் தொடர்புடைய 8 டாக்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…