கஜேந்திரகுமார் விவகாரம் – அமெரிக்க இராஜாங்க செயலருக்கு புலம்பெயர் அமைப்புகள் கடிதம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுதொடர்பான வழக்கினை அவதானிப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு எழுதியுள்ள கடித்தில் புலம்பெயர் அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெறும் சமீபத்தைய சம்பவங்கள் குறித்து நாங்கள் கூட்டாக எழுகின்றோம், எங்கள் கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்கான பொறுத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்தக்கவலைகளில் முக்கியமானது இந்துக்கோவில்கள் உட்பட தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களை அழிப்பதும் அதனை தொடர்ந்து பௌத்தர்கள் யாரும் வசிக்காத பகுதிகளில் பௌத்த ஆலயங்களை அமைப்பதுமாகும் என புலம்பெயா தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இலங்கை பாதுகாப்பு படையினரின் முழுமையான ஆதரவுடனேயே இது இடம்பெறுகின்றது எனவும் புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தமிழ்கட்சிகள் மற்றும் தமிழ் மக்களிற்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன தமிழ் அரசியல் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிராமமொன்றில் தனது கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தவேளை சீருடை அணியாத புலனாய்வு பிரிவினர் தலையிட்டனர் என புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவர்களின் அடையாளத்தை உறுதிசெய்யுமாறு கோரியவேளை அவர்கள் அதற்கு மறுத்தனர், அதன் பின்னர் அவர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டார் அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளார் பெண்ணொருவர் உட்பட மேலும் இருவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கான கடிதத்தில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இவை தெளிவாக தமிழ் அரசியல் தலைமை மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் தந்திரோபாயமாகும்,தமிழ்மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் அதிகாரத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களால் திட்டமிடப்படுகின்றன எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகமோசமான யுத்தகுற்றச்சாட்டுகள் போர்க்குற்றங்களிற்காக அமெரிக்க இரண்டு வருடங்களிற்கு முன்னர் அமெரிக்கா விதித்த தடையையும் அலட்சியம் செய்து சவேந்திரசில்வாவிற்கு முப்படைகளின் பதவி உயர்வு வழங்கப்பட்டது,சமீபத்தில் இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தமிழர் பகுதிகளில் மிக அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி மீண்டும் தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை வழங்குவதற்கான கூடுதல் ஊக்கத்தை வழங்கியுள்ளது என புலம்பெயர் தமிழர்அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம், என தெரிவித்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இந்தநிலையை தடுப்பதற்கான முதல் நடவடிக்கையை நீங்கள் எடுக்கவேண்டும்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை அவதானிப்பதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!