மனிதப் புதைகுழி ஆவணங்கள் அழிக்க உத்தரவிட்டார் கோட்டா!

ஜே.வி.பி கிளர்ச்சி காலத்தின் பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களை அழிக்க உத்தரவிட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று வெளியான அறிக்கையொன்றிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
    
ஜே.வி.பி. காலத்தில் தான் பணியாற்றிய பகுதிகளில் பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காக கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களில் மாற்றங்களை செய்து உண்மையை மறைக்க முயன்றார் என வெளியாகியுள்ள புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையில் ஜனநாயகத்திற்கான திட்டம் மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

2013 இல் மாத்தளையில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள ஐந்து வருடங்களிற்கு முந்தைய அனைத்து ஆவணங்களையும் அழித்துவிடுமாறு பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய வேளை கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டார் என வெளியாகியுள்ள புதிய அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.
அந்த மனிதபுதைகுழிகள் 1988-89 ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்தை சேர்ந்தவை என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச இராணுவ வீரராக அந்த பகுதியில் கடமையாற்றினார் என தெரிவித்துள்ள அறிக்கை, விசாரணைகளில் தலையிட்டு குளறுபடிசெய்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொலிஸ் அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!