தொல்பொருள் மீது கை வைப்பதை தவிர்க்காவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும்!

அரசியல் நோக்கத்துக்காக தொல்பொருள் மரபுரிமைகள் மீது கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் பாரிய விளைவு ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டை சீரழித்தவர்கள் தற்போது ஒன்றும் அறியாதவர்கள் போல் கருத்துரைப்பது வேடிக்கையாகவுள்ளது. ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஆற்றிய உரை முழுமையாக செயற்படுத்தப்பட்டிருந்தால் நாட்டு மக்கள் சொர்க்கத்தில் வாழ்ந்திருப்பார்கள்.

நாட்டு மக்கள் ஒரு வேளை உணவை பெற்றுக்கொள்ள போராடுகின்ற நிலையில் பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என கனவு உலகில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி கருத்துரைக்கிறார். அமெரிக்காவில் டொலரின் பெறுமதி குறைவடைந்த போது தேசிய மட்டத்தில் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்தது. இதனை பொருளாதார மீட்சி என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.கடன் பெறுவதை தவிர எவ்வித பொருளாதார கொள்கை திட்டங்களும் ஜனாதிபதியிடம் கிடையாது.

பாரம்பரிய அரசியல் முறைமையில் இருந்து விலகி தேசிய வளங்களை தனியார்மயப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். விடுதலை புலிகள் அமைப்புடன் நிதி கொடுக்கல் வாங்கல் செய்த நபருக்கு டெலிகொம் நிறுவனத்தை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தையை பிரித்தானியாவில் ஆரம்பித்துள்ளார்.

கடன் பெற்று பொருளாதாரத்தை முன்னேற்றவும்,கடுமையான சட்டங்களை இயற்றி சமூக கட்டமைப்பை கட்டுப்படுத்தவும் ஜனாதிபதி முயற்சிக்கிறார். அரசியல்வாதிகளின் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் ஊடகங்களை முடக்குவதற்காக ஒளி,ஒலி பரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹிட்லரை போல் செயற்பட முயற்சிப்பது கவலைக்குரியது.தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளில் கை வைக்கிறார். இது தவறானதொரு செயற்பாடாகும். இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் பாரிய விளைவுகள் ஏற்படும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுடன் ஒன்றிணைந்து ஒருபோதும் செயற்பட முடியாது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒற்றை சங்கிலி பாலத்தில் நாட்டை கொண்டு செல்லவில்லை. ராஜபக்ஷர்களை தூக்கிக் கொண்டு செல்கிறார்.இவ்வாறானவர்களுடன் எவ்வாறு இணக்கமாக செயற்பட முடியும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!