இன்று விசேட பாராளுமன்ற அமர்வு!

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட பாராளுமன்ற அமர்வு இன்று காலை 09.30 மணியளவில் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான விவாதத்தை மாலை 07.30 மணி வரை நடத்தி அதை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் 05 ஆம் திகதி புதன்கிழமை வாராந்த பாராளுமன்ற கூட்டத்தொரை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தை இந்த வாரத்துக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்தது.

இதற்கமைய பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16 ஆவது பிரிவுக்கு அமைய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்டார்.

இதற்கமைவாகவே விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது. விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!