காய்கறி விலை அதிகரிப்பு: இல்லத்தரசிகள் கவலை!

தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்தது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் வாங்கி சென்றனர்.
    
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று மேலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ. 75-க்கு விற்ற தக்காளி மேலும் 15 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ் விலை ரூ. 110-க்கும், பாகற்காய் விலை ரூ. 60-க்கும், பச்சை மிளகாய் விலை ரூ.80-க்கும், பட்டாணி விலை ரூ. 180-க்கும், இஞ்சி விலை ரூ. 190-க்கும், பூண்டு விலை ரூ.130-க்கும், வண்ண குடமிளகாய் விலை ரூ. 180-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து காய்கறிகளின் விலை உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!