பேராபத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம்: எச்சரித்த உக்ரைன் ஜனாதிபதி!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை தகர்க்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டு வருவதாக அச்சம் எழுந்துள்ளது. குறித்த அணுமின் நிலையத்தில் இருந்து திடீரென்று ரஷ்ய துருப்புகள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சனிக்கிழமை விடுத்துள்ள எச்சரிக்கையில், அந்த அணுமின் நிலையம் தற்போது மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்றார்.
    
இதனிடையே, உக்ரைன் ராணுவ உளவுத்துறையின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், Zaphorizhizhia அணுமின் நிலையத்தை தகர்க்கும் முடிவுக்கு ரஷ்யா வந்துள்ளது எனவும், இதனால் அணு கதிர்வீச்சு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையம் தொடர்பில் சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தற்போது ஆபத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, இது ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒப்பானது என்றார். உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே Zaphorizhizhia அணுமின் நிலையத்தை ரஷ்ய வீரர்களே கைப்பற்றி வைத்துள்ளனர். ஆனால் தற்போது, குறித்த பகுதியில் இருந்து அனைத்து வீரர்களும் வெளியேறியதாக தகவல் வெளியான நிலையிலேயே சந்தேகம் வலுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!