பிரித்தானியாவில் வாத்துகளுக்கு உணவளிக்க சென்ற 4 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

பிரித்தானியாவின் சோலிஹல் பகுதியில் வாத்துகளுக்கு உணவளிக்க சென்ற நிலையில், உறைந்த ஏரியில் தவறிவிழுந்து சிறுவர்கள் நால்வரும் இறந்ததாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சோலிஹல் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் உறைந்த ஏரியில் தவறிவிழுந்து 8 வயது ஃபின் பட்லர், அவரது சகோதரர் 6 வயது சாம், மற்றும் இவர்களது 11 வயது உறவினர் டாம் ஸ்டீவர்ட், இவர்கள் மூவரையும் அறிமுகமில்லாத 10 வயது ஜாக் ஜான்சன் ஆகிய நான்கு சிறுவர்கள் மரணமடைந்தனர்.
    
இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவர்கள் நால்வரின் மரணமானது ஒரு விபத்து என நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாத்துகளுக்கு உணவளிக்க சென்ற நிலையிலேயே, விபத்து நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் சிறுவன் ஃபின் முதலில் தவறி விழுந்துள்ளதாகவும், அவனை காப்பாற்றும் முயற்சியில் எஞ்சிய சிறுவர்களும் ஏரிக்குள் தவறி விழுந்ததாக கூறுகின்றனர். சிறுவர்கள் நால்வரும் உதவி கேட்டு கதறியதாகவும், அதன் பின்னரே அவர்கள் ஏரியின் அடித்தட்டில் மூழ்கியதாக தெரியவந்துள்ளது.

மேலும், ஒரு சிறுமி உட்பட அந்த வழியாக கடந்து சென்றவர்கள் சிலர் 999 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளனர். தண்ணீரில் மூழ்கிய பிறகு பத்து நிமிட இடைவெளியில் சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி மதியம் 2.56 மணிக்கு ஜாக், டாம் மற்றும் சாம் ஆகிய மூவரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், சிறுவன் ஃபின் உடல் மட்டும், ஏரியில் தவறி விழுந்து 31 நிமிடங்களுக்கு பின்னர் 3.05 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது.

இதில் ஃபின் மற்றும் அவரது உறவினர் டாம் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் மரணமடைந்துள்ளனர். ஜாக் சில மணி நேரங்களுக்கு பின்னர் மரணமடைந்துள்ளார். ஆனால் சாம் மட்டும் 3 நாட்கள் உயிருக்கு போராடிய நிலையில் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!