கனடியத் தூதுவரை வெளியேற்ற வேண்டும்! – சரத் வீரசேகர போர்க்கொடி.

குருந்தூர் மலை பௌத்த ஆலயத்தை அழிக்க முயன்றவர்களை சந்தித்த கனடா உயர்ஸ்தானிகரை இலங்கை ஏற்றுக்கொள்ள முடியாத நபராக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கனடா உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு குருந்தூர் மலையில் இனமோதலை உருவாக்க முயன்ற தமிழ் அரசியல்வாதி ரவிகரன் மற்றும் தமிழ்மக்களை சந்தித்துள்ளார் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

2000 வருடத்திற்கு மேற்பட்ட பௌத்த ஆலயத்தை அவர்கள் அழிக்க முயன்றனர் அவர்களை இவர் சென்று சந்தித்துள்ளார் என சரத் வீரசேகர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது இராஜதந்திரநெறிமுறையின் ஆணைகளிற்கு அப்பாற்பட்ட மிகவும் அவமானகரமான செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு சர்ச்சைக்குரிய செயல் என தெரிவித்துள்ள சரத் வீரசேகர கனடா தூதுவரை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபர் என அறிவிக்கவேண்டும் என நான் பரிந்துரை செய்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!