69 இலட்சம் மக்களாணையை கோட்டா பாதுகாக்கவில்லை!

கோட்டபய ராஜபக்ஷவை நாங்கள் தனிமைப்படுத்தவில்லை. ராஜபக்ஷர்களிடமிருந்து விலகி தனித்து செயற்படுவதாக காண்பிப்பதற்காக அவர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டு பொதுஜன பெரமுன அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்களை அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
    
தனியார் தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு,தேசியம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு 69 இலட்ச மக்கள் கோட்டபய ராஜபக்ஷவை தலைவராக தெரிவு செய்தார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் 69 இலட்ச மக்களாணையை பாதுகாக்கவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை,69 இலட்ச மக்களாணை என்பன பலவீனமடைய கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னர் நாட்டில் உண்ண உணவு இல்லாமல் எவரும் நெருக்கடிக்குள்ளாகவில்லை. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள்,எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் எமது அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள்.

எரிபொருள்,எரிவாயு தட்டுப்பாடு,மின்விநியோக துண்டிப்பு ஆகிய காரணிகளால் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக ராஜபக்ஷர்களிடமிருந்தும்,பொதுஜன பெரமுனவில் இருத்தும் தனித்து செயற்படுவதாக மக்களுக்கு காண்பிக்கும் வகையில் தனித்து செயற்பட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த விஜயதாஸ ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்கிரமநாயக்க, ரொஷான் ரணசிங்க ஆகியோரை இறுதி கட்டத்தில் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் பஷில் ராஜபக்ஷவை நிதியமைச்சர் பதவியில் இருந்தும்,மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்தும் விலகுமாறு கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானத்துக்கு மதிப்பளித்து அவர்கள் பதவி விலகினார்கள்.கடந்த ஜூன் 09 ஆம் திகதி போராட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவரை விட்டுச் சென்றார்கள்.

நெருக்கடியான நிலையில் பஷில் ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரமே அவரை பாதுகாத்தார்கள்.ஆகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை ஒருபோதும் தனிமைப்படுத்தவில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!