உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்றிரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று நடந்தது. இறுதி களத்தில் 12 பேரில் 3 இந்தியர்கள் இருந்ததால் ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் உற்றுநோக்கினர். எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
    
இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தி வரலாற்றில் தடம் பதித்தார். அவருக்கு கடும் சவாலாக இருந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (87.82 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார். மற்ற இந்தியர்களான கிஷோர் குமார் (84.77 மீட்டர்), டி.பி.மனு (84.14 மீ) முறையே 5 மற்றும் 6-வது இடங்களை பிடித்தனர்.

நீரஜ் சோப்ராவின் பதக்கம், உலக தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது பதக்கமாக அமைந்தது. இதற்கு முன்பு இதே நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு வெள்ளிப்பதக்கமும், 2003-ம் ஆண்டில் அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலமும் வென்று இருந்தனர். உலக தடகளத்தில் தங்கமகனாக உருவெடுத்த அரியானாவைச் சேர்ந்த 25 வயதான நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!