குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத பணியகத்தால் என்னபயன்? – விக்னேஸ்வரன்

குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமல்போன அலுவலகத்தினால், மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.

காணாமல் போனோர் அலுவலகம் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய அலுவலகம் அல்ல. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைகளுக்கு அமைய குற்றவாளிகளுக்கு அரசாங்கம் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு தற்காலிகமானது. ஆனால் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் நிரந்தர அலுவலகமாக இருக்கின்றபோதும், மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அலுவலகமாக அது தென்படவில்லை.

காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் மனிதாபிமானம் மிக்க ஒருவர் என்பதுடன், பல தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார். அது மட்டும் ஒரு அலுவலகத்தை திறன்மிக்கதாக ஆக்காது.

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பிழை செய்தவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்கள் என 2000ற்கும் அதிகமானவர்கள் தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த அரசிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதுவரை எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுபோன்றதொரு நிலை இந்த காணாமல்போன அலுவலகத்துக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. அது மாத்திரமன்றி குறித்த அலுவலகத்துக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. குற்றம் புரிந்ததாக காணப்பட்டால் அதுபற்றி உரிய தரப்புக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கத் தவறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பிரதிபலனும் கிடைக்கப்போவதில்லை .

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகச் சட்டத்திலும் பிரிவு 13(2)ன் கீழ் குறித்த அலுவலகம் குற்றம் இழைத்ததாக அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் மீது, அவ்வலுவலக அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களைக் குற்றம் செய்தவர்களாகவோ தவறு இழைத்தவர்களாகவோ கணிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நீதவானின் கட்டளையின் பிரகாரம் ஒருவர் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி பிரேதங்களை வெளியெடுக்க காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னைய ஆணைக்குழுவுக்கு அந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை. வெளியெடுக்கப்பட்டு இறந்தவர்களின் பிரேதங்கள் அடையாளம் காணப்பட்டு மரணத்திற்கான காரணங்கள் கூட வெளியிடப்படலாம். அதன் பின் இந்த அலுவலகம் என்ன செய்யலாம் என்பதும் தெளிவாக இல்லை.

விசாரணைகளின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டார் என்று அறியப்பட்டு அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாவிட்டால் இந்த அலுவலகத்தால் எந்தப் பயனும் இல்லை.

2016ம் ஆண்டின் 12ம் இலக்கச் சட்டமான தகவல் அறியும் சட்டத்தின் ஏற்பாடுகள் குறித்த காணாமல் போனோர் அலுவலகச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த முடியாது என்றிருக்கின்றது. குற்றவாளிகளைப் பாதுகாத்து அவர்கள் பற்றிய விபரங்களும் வெளிவராமல் குறித்த சட்டம் பாதுகாக்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு முன் ஏற்பட்ட தீர்மானமானது காணாமல் ஆக்கப்பட்டோர் மீது தவறிழைத்தோர் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றிருக்கின்றது. ஆனால் தவறிழைத்தோர் பற்றிய செய்திகளை அந்தரங்கச் செய்திகளாக்கி அது சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்கள் அறிய முடியாது என்றிருப்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

குற்றங்களை இனம் காண வேண்டும், குற்றம் செய்தவர்களைச் சட்டப்படி குற்றவாளிகளாகக் காணப்பட்டபின் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய அரசாஙகத்திற்கு இல்லை. அப்படியாயின், மனித உரிமை மீறல்களை மூடிவைக்கும் உத்தேசம் இந்த அரசாங்கத்திற்கும் உண்டா என்று கேள்வியும் எழுகின்றது.

இந்த அலுவலகத்தால் ஆகக் கூடியது காணாமல் போன சிலருக்கு என்ன நடந்ததென்று அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு மரணத்தை உண்டுபண்ணியவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து நல்லவர்கள் போன்று உலகில் உலாவரக் கூடிய வாய்ப்புக்கள் உருவாக்கி கொடுக்கப்படுகின்றது.

இவ்வாறான குறைபாடுகளுக்கு இலக்கான பரணகம ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுக்கள் சட்டத்தில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்ய சிபார்சு செய்த நடவடிக்கைகளை அடையாளம் கண்டு எவ்வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் கருத்துடைய அதிகாரமுடைய அலுவலகமாக மாற்ற முடியுமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!