கடந்தகால ஆட்சியை மாற்றி புதிய அரசைக் கொண்டு வந்தது அவர்களிடம் பிச்சை எடுப்பதற்கு அல்ல. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அதற்க்காகவே ஒரு பிசாசை அடித்துக் கலைப்பதற்காக ஒரு பேயை ஆதரித்தோம். என வன்னி நாடாளுமன்ற உறுபப்பினர் வைத்தியக்கலாநிதி சி. சிவமோகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற நூலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: எல்லோரிடமும் ஒரு கேள்வி இருக்கின்றது இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று. இது எம்மக்களிடம் விதைக்கப்படும் நஞ்சுவிதை. எமது மக்கள் ஒதுக்கப்பட்டு செட்டிகுளம் முகாம்களில் இலையான்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். என் கண்முன்னே எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளார்கள் அவர்களை வெளியில் மீட்டெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்தது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்த மண் அவர்களின் கைகளில் இருந்த பொழுது எந்த வசதியும் இல்லாது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் மக்கள் பணம் இன்றி இருக்கவில்லை. எப்படி இருந்தாலும் வாழமுடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். அந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் நாங்கள். விடுதலைப்புலிகளின் முடிவுக்குப் பின்னர் மக்கள் பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்கள் கையில் எடுத்தது.
இந்தியாவுடன் சண்டைபிடித்து கலந்துரையாடி வடக்கு கிழக்கு மக்களுக்காக ஜம்பதாயிரம் வீட்டுத்திட்டங்கள் கொண்டுவந்ததும் கூட்டமைப்பே. இதனை நான் ஏன் சொல்கின்றேன் என்றால் கேள்வி கேட்பவர்களுக்கு நாங்கள் சொல்லவேண்டிய விடயம். வெள்ளை வேன் கடத்தல்கள் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கண்டபடி இடம்பெற்றது.
பிடித்து சுட்டார்கள் விசாரணை இன்றிச் சித்திரைவதை செய்தார்கள். புலனாய்வாளர்கள் என்ற போர்வையில் சிங்கள இளைஞர்களை இறக்கிவிட்டு ஆட்சி செய்தவர்கள். அவர்களின் அராயக ஆட்சியை ஒழித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. நாம் ஒன்றிணைந்தோம் அவர்களைத் தூக்கி எறிந்தோம்.
ஒட்டு மொத்த தமிழ்மக்கள் போட்ட வாக்குகளும் நாங்கள் நினைத்த ஒருவருக்கு வீழ்ந்தது. அதற்காக அவர்கள் சிறந்தவர்கள் என்று சொல்லவில்லை ஒரு பிசாசை அடித்துக் கலைப்பதற்காக ஒரு பேயை ஆதரித்தோம் அவ்வளவுதான்.
இன்று தமிழ் மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டி இருக்கின்றோம் இப்போது எவரையும் கைதுசெய்ய முடியாது கைதுசெய்வதாக இருந்தால் அதன் ஆணை வழங்கப்படவேண்டும். குடும்பத்துக்கு தெரியப்படுத்தவேண்டும். எதற்காகக் கைது. எங்கு கொண்டுசெல்லப்படுகிறோம் என்று எழுத்துமூலம் தந்த பின்னர்தான் இந்த அரசு யாரையும் கைதுசெய்ய முடியும்.
இந்த அரசை கொண்டுவந்தது அவர்களிடம் பிச்சை எடுப்பதற்கு அல்ல எங்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு. உரிமைகளை வென்றெடுக்கப் பல வழிகள் உண்டு ஆனால் மக்களின் பாதுகாப்புக்காக இந்த அரசை மாற்றி இருக்கின்றோம் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!