கடந்த 11ஆம் திகதியன்று இடம்பெற்ற ஊடக வியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்துக்களைத் துணிவுடன் தெரிவித்திருக்கிறார். வடக்குப் போன்று தெற்கிலும் மக்களுக்குச் சொந்தமான காணிகளைப் படையினர் அடாத்தாகப் பிடித்து வைத்திருந்தால் என்ன நடந்திருக்குமெனக் கேள்வி எழுப்பிய அவர், வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கும் படையினர் அங்கு வெதுப்பகத்தை நடத்துவது எந்த வகையில் நியாயமானது என்றும் கேள்வி எழுப்பினார். கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை முக்கியத்து வம் பெறுகின்றது.
படையினர் வசமிருந்த 650 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்படுவது நல்லதோர் சமிக்ஞை
வடக்கில் படையினர் வசமிருந்த 650 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தமைக்குப் பிரதியுபகாரமாக இந்தக்காணிகள் மீள ஒப்படைக்கப்படுகின்றனவா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதனை முற்றாக மறுத்த அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரி விப்பதற்கு கூட்டமைப்பு எந்தவொரு நிபந்தனையையும் விதிக்கவில்லையெனக் கூறினார்.
மக்களின் காணிகளைப் படையினர் அடாத்தாகப் பிடித்து வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்திவிட முடியாது. போர் இடம்பெற்றபோது பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. போர் ஓய்ந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் படையினரால் அந்தக் காணிகள் விடுவிக்கப்படாமையை எவராலும் நியாயப்படுத்திவிட முடியாது.
தென்பகுதியைச் சேர்ந்த இனவாதிகளுக்கு இந்தக் காணிகளை விடுவிப்பதில் உடன்பாடில்லாத காரணத்தால், தேவையில்லாத விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். வடபகுதியில் 650 ஏக்கர் காணிகளைப் படையினர் விடுவித்த மையையும் இனவாத நோக்கில் அவர்கள் பார்க்கின்றனர். மக்களிடமிருந்து அடாத்தாகப் பிடித்து வைக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதில்கூட இனவாதச் சிந்தனையை வெளிக்காட்டுகின்ற இவர்களுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன நல்ல சாட்டையடி கொடுத்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் மீது வைராக்கியம் பாராட்டும்
கூட்டு எதிரணித் தரப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமானால், அது நிச்சயமாக முறியடிக்கப்படுமென ராஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதால் ஆத்திரமும், அவமானமும் அடைந்த மகிந்த அணியினர், சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து அகற்றிவிட்டால் தாம்பட்ட அவமானம் துடைத்தெறியப்பட்டுவிடுமென நம்புகின்றனர்.
இதனால் எப்பாடுபட்டேனும் சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி வைப்பதற்குத் துடியாய்த் துடிக்கின்ற னர். ஆனால் இதை முறியடிக்க வேண்டுமென்பதில் ரணில் தரப்பினர் குறியாக இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
முன்னாள் அரச தலைவர்களான ஜே.ஆர் ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் போரை நடத்தியதில் பிரதான பங்கை வகித்தனர். இவர்கள் தமிழர்களை மனிதர்களாகக்கூட மதிக்கவி்ல்லை. மிருகங்களை நடத்துவது போன்று அவர்களை நடத்தியுள்ளனர்.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு இவர்களில் எவருமே ஒருபோதும் முயற்சி செய்ததில்லை. மாறாக தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழித்து விட்டால், எல்லாமே சரியாகிவிடுமென எண்ணிச் செயற்பட்டனர். இதன் விளைவுகளைத்தான் நாடு இன்று அனுபவித்து வருகின்றது. ஆனாலும் இந்த இனவாதிகள் இன்னமும் திருந்திய தாகத் தெரியவில்லை.
பெளத்த மேலாதிக்கச் சிந்தனை உள்ளவரை
இன ஒற்றுமைக்கு வாய்ப்பில்லை
பெளத்த மேலாண்மை இலங்கையில் இருக்கும் வரையில், இலங்கையில் வாழ்கின்ற இனங்களுக்கிடையில் ஒற்றுமை நிலவுமென எதிர்பார்க்க முடியாது. பெளத்த தேரர்களும், மகா நாயக்கர்களும் அரசியலில் நேரடியாகத் தலையிட்டு செல்வாக்குச் செலுத்தி வருகின்றனர். உலகத் தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி தொடர்பான நிகா்வுகள்கூட பெளத்த சங்கத்தினரின் நெருக்குதல் காரணமாக மே மாதம் ஏழாம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டமை உலகில் நிகழாத அதிசயங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த அதிசயம் இங்கு நிகழ்ந்துள்ளது.
ராஜித போன்று துணிச்சலான அரசியல்வாதிகள் தெற்கில் உருவாகாதவரை நாட்டில் அமைதியையும், இன நல்லிணக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது. நாட்டின் தலைவிதியிலும் மாற்றம் ஏற்படாது. ஒரு கட்டத்துக்கு அப்பாலும் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்வதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளுமெனக் கூறமுடியாது.
இம்முறை இடம் பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் இலங்கையின் உண்மையான முகம் வெளிப்பட்டு விட்டது. தொடர்ந்தும் பொய் முகத்தைக் காட்டிக் கொண்டிருப்பதற்கு அதனால் முடியாது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!