வாலாஜாவில் மேடை பாடகர் அடித்து கொலை- மகன் வெறிச்செயல்

வாலாஜாவில் மேடை பாடகரை மகனே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜா தென்றல் நகரை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 54). இவர், மேடை கலைக்குழுவினருக்கு இசை பயிற்சியாளராகவும், பாடகராகவும் இருந்தார். இவரது மனைவி தனுஜா குமாரி (48). தனியார் பள்ளி இந்தி ஆசிரியை.

இவர்களுக்கு பிரதீஸ்வரன் (25), பிரசாத் (20) என 2 மகன்கள் உள்ளனர். பிரதீஸ்வரன், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். பிரசாத் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், நேற்றிரவு அசோக்குமாருக்கும், மூத்த மகன் பிரதீஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த பிரதீஸ்வரன் தந்தை என்ற பாசம் இரக்கமின்றி அசோக் குமாரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கினார்.

இதில் பலத்தகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். நள்ளிரவு 1 மணியளவில் இந்த கொலை சம்பவம் குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து, பிரதீஸ்வரன் மற்றும் அவரது தாய், தம்பியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!