‘ககாடு – 2018’ இல் பங்கேற்க அவுஸ்ரேலியா விரையும் சிறிலங்கா போர்க்கப்பல்

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ‘ககாடு – 2018’ கூட்டு கடற்பயிற்சியில் பங்கேற்க சிறிலங்கா கடற்படையின் ‘சிந்துரால’ போர்க்கப்பல் டார்வின் நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அவுஸ்ரேலிய கடற்படையின் ஏற்பாட்டில், 26 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும், ‘ககாடு – 2018’ கூட்டு கடற்படைப் பயிற்சி டார்வின் துறைமுகத்துக்கு அப்பால், எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் நாள் ஆரம்பமாகி, செப்ரெம்பர் 16ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கிறது. சிறிலங்கா கடற்படை சார்பில் இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு அண்மையில் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ‘சிந்துரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் பங்கேற்கவுள்ளது.

26 அதிகாரிகள் மற்றும் 124 கடற்படையினருடன் ‘சிந்துரால’ போர்க்கப்பல், நேற்று முன்தினம் திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

எதிர்வரும் 29ஆம் நாள் இந்தப் போர்க்கப்பல் டார்வினை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!