அடுத்தவாரம் நேபாளத்தில் மோடியைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிம்ஸ்ரெக் எனப்படும் வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நேபாளத்தில் எதிர்வரும் 30ஆம், 31ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது.

காத்மண்டுவில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டின் போது, பக்க நிகழ்வாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்துப் பேச்சு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் அதிகரித்து வரும் சீனத் தலையீடுகள், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன் போது பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!