நாயாறு மீனவர் பிரச்சினையை வைத்து இனவாதத்தைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம்! – மனோ கணேசன்

நாட்டில் இன வாதத்துக்குத் தூபமிடும் யுகத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்றும், நாயாறு மீனவர் பிரச்சினையை வைத்து எவரும் மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் அண்மையில் தெற்கு மீனவர்களின் மீன் வாடிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாகவும், அது இனவாதச் செயல் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று சபையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி விவகாரம் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தெற்கிலிருந்து சட்டவிரோதமாகச் சென்று மீன்பிடிப்பவர்களே அங்கு பரம்பரையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் வாடிகளைக் கொளுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் சபையில் தெளிவுபடுத்தினார்.

அவ்வாறில்லை என அதனை மறுத்து கருத்துக் கூற விமல் வீரவன்ச உள்ளிட்ட கூட்டு எதிரணி எம்.பிக்கள் முயன்ற போதும், தம்மை தெளிவுபடுத்த விடுமாறும் அங்குள்ள மாவட்டச் செயலாளரின் உண்மையான அறிக்கைக்கிணங்கவே நாம் சபையில் இதனை வெளியிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதற்கிணங்க அடுத்த கட்ட செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!