அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமர் மொறிசனுக்கு சிறிலங்கா பிரதமர் வாழ்த்து

அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்கொட் மொறிசனுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

”சிறிலங்காவும், அவுஸ்ரேலியாவும் நெருக்கமான நண்பர்கள். பல்வேறு துறைகளில் பொலுவான நலன்கள் குறித்து மிகவும் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றன.

இந்த நட்புறவை இன்னும் வலுப்படுத்துவதற்கு, புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிசனுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்.

முன்னர் குடியேற்ற மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது, சிறிலங்காவுக்குப் பயணம் செய்திருந்தீர்கள். இந்த விடயத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருங்கிய ஒத்துழைப்பை அறிந்திருந்தீர்கள்.

ஏனைய துறைகளிலும், இந்த ஒத்துழைப்பை பரவலாக்குவதற்கான தருணம் வந்துள்ளது” என்றும் சிறிலங்கா பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஸ்கொட் மொறிசன், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கமாக இணங்கிச் செயற்பட்டவர் என்பதும், அவுஸ்ரேலியாவின் குடிவரவுச் சட்டங்களை கடுமையாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!