கமல் அடிக்கடி கருத்தை மாற்றுபவர் – துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கு

கமல் தனது கருத்தை அடிக்கடி மாற்றுவதாகவும், அவரது கருத்துக்கு பதிலளிக்க முடியாது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

அதிமுகவில் விரிசல் என்று திருநாவுக்கரசர் கூறியது குறித்து கேட்டதற்கு, அதிமுகவில் விரிசல் என திருநாவுக்கரசர் கூறுவது பகல் கனவு, அவரது கருத்துக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்றும், டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

அரசுக்கு பாடம்புகட்டும் பணியில் ஈடுபட உள்ளதால் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கமல் கூறியது குறித்து கேட்டதற்கு, ‘கமலின் கருத்து அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும், அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது’ என்றார் ஓபிஎஸ்.