இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு இலங்கையை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்- ரணில்

இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வியட்நாமிற்கான விஜயத்தின் போது இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரச நிறுவனத்திற்கு 70 வருடகால குத்தகைக்கு வழங்கியுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அரசாங்கம் விரும்பினால் எந்த நேரத்திலும் இது குறித்த உடன்படிக்கையிலிருந்து விலகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை கடற்படையினரின் கரங்களிலேயே உள்ளது,கடற்படையின் தென்பகுதிக்கான கட்டளைபீடத்தை நாங்கள் காலியிலிருந்து அம்பாந்தோட்டைக்கு மாற்றியுள்ளோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய அதிகாரிகளுடன் மத்தல துறைமுகம் தொடர்பான கூட்டு முயற்சி குறித்து ஆராய்ந்துவருகின்றோம்,எனவும் தெரிவித்துள்ள பிரதமர் எனினும் எவற்றையும் இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கு இந்தியாவை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்பது தொடர்பில் எங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு காணப்படுகின்றது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இந்தியாவிற்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் நாங்கள் இந்த கட்டமைப்பிற்குள்ளேயே செயற்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்திற்கும் இராணுவ ரீதியிலான பின்னணி எதுவும் இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எனக்கும் இடையில் சிறந்த உறவு உள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் முதல்தடவையாக இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து செயற்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மாத்திரமல்ல உலகிலேயே இரு பிரதான கட்சிகள் சேர்ந்து செயற்படுவது இதுவே முதல்தடவை எனவும் தெரிவித்துள்ள பிரதமர் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயற்பட தீர்மானித்திருந்தால் அது நீண்ட காலம் நீடித்திருக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!