றியூனியன் தீவுக்கு படகில் செல்ல முயன்ற 90 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது

நீர்கொழும்புக்கு அப்பாலுள்ள கடலில் படகு ஒன்றில் கைது செய்யப்பட்டவர்கள் றியூனியன் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

“நீர்கொழும்பில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த 90 இலங்கையர்களை சிறிலங்கா கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் இடைமறித்து, கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டு வந்தன.

இந்தப் படகு றியூனியன் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது, அங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்ல இவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.

கைது செய்யப்பட்ட 90 பேரில் ஒருவர் பெண் ஆவார்.

ஆரம்ப விசாரணைகளில் இவர்கள் மட்டக்களப்பு, உடப்பு, சிலாபம், அம்பாறை, மன்னார், மாத்தளை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இவர்கள் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!