மகிந்த அணியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் நடவடிக்கையை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவோ – மன்னிக்கவோ மாட்டார்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியா வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தெரிவு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது,
நாங்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தோம். இருப்பினும் அதிஷ்டத்தின் மூலம் இன்று நீதி வென்றிருக்கின்றது. இந்த வன்னி மண்ணிலே எங்களை அழித்து ஒழித்து நிர்கதியாக்கிய மகிந்தவின் கட்சியோடு இணைந்து ஆட்சியமைக்க ஆதரவு கேட்ட செயற்பாட்டை தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் நாங்கள் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் சுயமாகவே செயற்பட்டார்கள். அது அவர்களுடைய சொந்த விருப்பம்.
வவுனியா நகர சபையில் தவிசாளராக தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கின்றேன் – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!