வடமராட்சியில் கடலட்டை பிடித்த சிங்கள மீனவர்கள் மடக்கிப் பிடிப்பு! – பொலிசாரிடம் கையளிக்க மறுப்பதால் பதற்றம்

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த எட்டு சிங்கள மீனவர்களை, வடமராட்சி மீனவர்கள் மடக்கிக் பிடித்தனர். இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கடலில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவதால் இவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றிருந்தன.இதனையடுத்து கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினர்களும் அந்த மீனவர்களை வெளியேற்றுவது கூறியிருந்தார் போதிலும் அங்கு தொடர்ந்தும் அவர்கள் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு தாளையடிப் பகுதியில் தங்கியிருந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற எட்டு மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பிற்குள் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட போது வடமராட்சி மீனவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸாரும் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல முற்பட்ட போதும் அதற்கு அப்பகுதி மீனவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். சட்ட விரோதமான தொழில்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் இந்த விடயத்தில் தமக்கு சாதகமான முடிவு பொறுப்பு வாய்ந்த தரப்பினரால் தரப்பட வேண்டுமென்றும் அப் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!