சிறிலங்கா படைகளை தப்பிக்க வைக்கும் திட்டத்துடன் அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விடுவிக்கும் திட்டங்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் நாளை நியூயோர்க் செல்கிறார். வரும் 25ஆம் நாள், மாலை ஐ.நா பொதுச்சபையில் அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.

இதன் போது, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து – அவர்களை விடுவிப்பதற்கான யோசனைகளை முன்வைக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் ஏற்கனவே கூறியிருந்தார்.

நியூயோர்க்கிற்கான இந்தப் பயணத்தின் போது, பக்க நிகழ்வாக, சில உலகத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவும் சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார்.

மேலும் ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!