மைத்திரியுடன் இணக்கத்தை ஏற்படுத்த மகிந்த திட்டம்! – கட்டை போடும் பசில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் மகிந்த ராஜபக்‌ஷ விருப்பம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.19வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறி செயற்படும் வகையிலான அதிகாரங்கள் பிரதமர் பதவி வகிக்கும் நபருக்கு கிடைக்கப் பெறவுள்ளது.

இதன் காரணமாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக்கட்சியை இணைத்து தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் மூலம் தான் பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்வது அவரது நோக்கமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீரவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, எந்தவொரு கட்டத்திலும் மைத்திரியுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதன் காரணமாக கூட்டு எதிர்க்கட்சிக்குள் புதியதொரு கருத்து வேறுபாடு வளர்ந்து கொண்டிருப்பதாக அதன் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!