உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே அரசு உத்தேசித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் செப்ரெம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும். இவ்வாறு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
அவரது அமைச்சில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகின்றது. உறுப்பினர்களின் தொகையை அதிகரிப்பதால் மாத்திரம் மக்களுக்கு முறையான சேவைவை வழங்கி விட முடியாது. எதிர்வரும் காலங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் அரச தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கூட்டு அரசில் ஒவ்வொரு துறைகளிலும் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் குற்றஞ் சுமத்துவது ஒரு சிலரின் அரசியல் கொள்கையாக காணப்படுகின்றது. தற்போது மாகாண சபைகள் தொடர்பில் அரசின் மீது பொய்யான குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலுக்கு பயம் என்ற காரணத்தால் தேர்தலை தொடர்ந்து பிற்போட்டு வருகின்றது என்று குற்றம் சுமத்துகின்றனர்.
உள்ளூராட்சித் இலங்கை அரசியல் வரலாற்றில் நீதியானதும், சுயாதீனமானதுமாகவே இடம் பெற்றது. புதிய தேர்தல் முறைமையைப் பயன்படுத்தி பல விடயங்கள் நீக்கப்பட்டு தேர்தல் இடம் பெற்றது.
மாகாண சபைத் தேர்தலும் தற்போது பலரின் எதிர்பார்ப்பை பெற்றதாகக் காணப்படுகின்றது. சிலர் பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்த அரசுக்கு அழுத்தம் பிரயோகித்து வருகின்றனர்.
மாகாண சபை தேர்தல் எக்காரணத்துக்காகவும் பழைய முறைமையில் இடம் பெறமாட்டாது. கூட்டு அரசு ஒருபோதும் அதற்கு அனுமதி வழங்காது. இந்தத் தேர்தல் முறையில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன என்று கூறுபவர்கள் தேர்தலில் எதிர்பார்த்த பெறுபேகள் கிடைக்கப்பெறாதவர்களாகவே காணப்படுகின்றனர். புதிய தேர்தல் முறையின் காரணமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பல விடயங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் சில குறைபாடுகள் இருந்தால் அவற்றுக்கான தீர்வை மாத்திரமே காணவேண்டும். அதற்காக இந்தத் தேர்தல் முறைமையை இல்லாமல் செய்து பழைய தேர்தல் முறைமையை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமற்ற விடயம்.
மாகாண சபைத் தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு உத்தேசிக்கப்பட்ட மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். நாட்டு மக்களும் புதிய தேர்தல் முறைமையையே விரும்பியுள்ளனர்.
மக்களின் தேவைகளை உணர்ந்தே அரசு செயற்படவேண்டும். பழைய தேர் தல் முறைமையை ஆதரிப்பவர்கள் தமது சுய நல விடயங்களை மாத்திரம் கருத்திற் கொண்டு அர சில் தாக்கம் செலுத்துகின்றனர் என்பது மாத்திரம் உண்மையாக காணப்படுகின்றது -– என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!