இப்பிடியேபோனா இன்னும் கொஞ்ச நாளிலை எல்லாரும் இந்த வெயிலுக்க கிடந்து செத்துப்போயிருவம். இது பரவாயில்லை… அங்கைபோய்ப் பாத்தீங்க எண்டாத் தெரியும்… அது ஒரு சின்ன முள்ளிவாய்க்காலேதான். அதுகள் கிடந்து பொசுங்கிக் கொண்டிருக்குதுகள். அதிலை ஒருத்தர்… ஆள் வருத்தக்காரரும்தான்… ஆனா நல்லா இருந்த மனுசன்… முதல் நாள் களிமண் குழைச்சு சாந்துக்கரண்டியால கல்லடுக்கிக் குந்துகட்டிக் கொண்டிருந்த மனுசன்… உந்த வெயிலுக்க… தகரக் கொட்டிலுக்க கிடந்தா…? ஆள் முடிஞ்சுது…!
வயசுபோன ஆக்கள், சின்னப் பிள்ளையள் எண்டு இஞ்சையிருக்கிற பதினாறு குடும்பத்திலையும் பலபேர் இருக்குதுகள்… இப்பிடியேபோன ஒராள் தேறாது…’’’ இது சந்தனத்தரையிலுள்ள சசி. மூன்று பிள்ளைகளின் தந்தை.
சந்தனைத்தரையை அண்மித்த மல்லந்தரையில் குடியேறியவர்களில் ஒருவர் கடந்தவாரமளவில் சாவடைந்திருந்தார். அந்தச் சாவுக்குரிய உடனடிக்காரணமாக அதிகரித்த வெயிலும், கொதித்துக்கொண்டிருக்கின்ற அந்தத் தரையில் அவர்கள் அமைத்திருக்கின்ற தகரக் கொட்டில்களுமே சிலாகிக்கப்பட்டன. அவருடைய இறப்புக்கு இவையெல்லாம்தான் காரணமா? இல்லையா? என்பது தொலைவில் வைக்கப்பட்டாலும், அங்கு குடியேறிய ஏனையவர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதாகத்தான் இருக்கிறது…
எவ்வளவு முயற்சி செய்தும் முடிய வில்லை. எப்படி முனைந்தாலும் தோல்விதான் எட்டிப்பார்க்கிறது. அந்த வெயிலின் உச்சத்தை எப்படித்தான் சொல்வது…? சூடேறிய அந்தத் தரைக்கும் முறுகிச் சுருண்டுகொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. கொதிநிலை அதிகமாகிக் கொண்டிருந்தது. பாதணிகளுக்கு மேலாக ஏறி, குதிக்காலைப் பதம் பார்க்க விளைந்தது வெயில். ‘அப்பாடா’ என்றபடி அவர்கள் அமைத்திருக்கும் கொட்டகைக்குள்போய் ஒதுங்கிக் கொண்டேன்.
என்ன கொடுமை…! உள்ளே வெக்கை இன்னும் அதிகமாகிவிட்டிருந்தது. சருமம் எரிந்துகொண்டு வந்தது. கூடவே புளுக்கம். வியர்வை நீராட்ட விழைந்தது. அவர்கள் அமைத்திருக்கும் கொட்டகைக்குள் நிற்பதைக்ககாட்டிலும் வெட்ட வெளியில் நிற்பது உத்தமமாகப் பட்டது. ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் அந்தத் தகரக்கொட்டகைகள் தான் தஞ்சம். சசி சொன்னதைப்போலத்தான்… அவர்கள் வெந்துகொண்டிருந்தார்கள்.
இதுமட்டுமல்ல சசி
இன்னமும் சொன்னார்…
‘‘எங்கட சொந்த இடம் பலாலி. உதயகல வாசாலையடி. முருக்கடி எண்டுற இடத்தில இருந்தனாங்கள். எங்களுக்கு அங்கை மூண்டு பரப்புக் காணிக்குக்கிட்டக் கிடக்கு. எனக்கு மட்டுமில்ல இஞ்சை இருக்கிற எல்லாருக்குமே அங்கை ஒண்டோ, ரெண்டோ பரப்புக் காணியாவது இருக்குது. நல்ல இடம்… நல்ல தண்ணி… சின்னத் தோட்டம் வைப்பம். சிலவேளை தோட்டக்கூலிக்கும் போவம்… சிலர் சீவல் தொழில் செய்வினம், கடக்கரையை அண்டியிருக்கிறவை மீன்பிடிப்பினம், சில காலங்களிலை தோட்டம் செய்வம். இல்லாட்டிக் கூலிவேலைக்குப் போவம். வாழ்க்கை நல்லபடியப் போய்க்கொண்டிருந்துது.
தொன்னூறாம் ஆண்டு இடம்பெயர்ந்தனாங்கள். கையில கிடைச்ச சமானுகளை எடுத்துக்கொண்டு போட்டிருந்த உடுப்புகளோடை வெளிக்கிட்டனாங்கள்… பதினாறு, பதினேழு குடும்பங்களா இஞ்சை வந்து(உடுப்பிட்டி) முகாமிலை இருந்தனாங்கள். பிறகு அதிலை கிடந்த காணி ஒண்டுக்குள்ள எல்லாரும் வீடுகளமைச்சு இருந்தம். கிட்டத்தட்ட இருபத்தெழுவருசம் இருந்தனாங்கள். அது வெளிநாட்டிலை இருக்கிற ஒருத்தற்ற காணியாம். அவர் கோட்சில கேஸ்போட்டு எங்களை எழும்பச் சொல்லி நோட்டீஸ் அனுப்பீற்றார். நாங்கள் எழும்பீற்றம்’’
பத்து வருடங்கள்வரை ஓரிடத்தில் தொடர்ச்சியாக வசித்தால், வசித்தவர்களுக்கு அந்த நிலத்தில் உரிமை இருக்கிறது என்றும், அவர்களை அங்கிருந்து அகற்றுவதாக இருந்தால் அவர்கள் குடியமர்வ தற்கேற்ப நிலத்துண்டை வழங்கவேண்டும் என்றும் உலாவுகின்ற செவிவழிக்கதைகள் இவ்விடத்தில் உங்களைப்போலவே எனக்கும் பொறி தட்டின. ஆனால், சசி தொடர்ந்து கூறினார்.
‘‘எங்களை அந்த மனுசன் தன்ர காணிக்குள்ளை இவ்வளவு காலமும் இருக்கவிட்டதே பெரிய காரியம்! நோட்டீஸ் வந்த உடனை நாங்கள் இருக்கிறதுக்குக் காணி விசாரிக்கத் தொடங்கினம். எல்லாரும் ஒரேயிடத்திலை இருக்கிறமாதிரிக் காணி கிடைக்கயில்லை. இதிலை(சந்தனத்தறை) 13பரப்புக்காணி வாங்கினது. ஆறு குடும்பங்கள் இருக்கிறம். ஆளுக்கு இவ்விரண்டு பரப்புக் காணிப்படி பங்கிட்டனாங்கள். பொதுக்கிணத்துக்கும் உந்த ஒழுங்கைக்கும் மிச்சத்தை விட்டிருக்கு. ஒரு பரப்பு ஒண்டேகால் லச்சம். ஜி.எஸ்மார் குடும்பத்துக்கு ெரண்டு இலட்சம் தந்தவை. நாங்கள் ஆளுக்கு அம்பதாயிரம் போட்டனாங்கள். ஆனா அங்காலை மல்லந்தரையில இருக்கிறவையின்ர காணி விலைகூட. அதிலை ஏழு குடும்பங்கள் இருக்கு. அங்கையும் ஆளுக்கு ரெண்டு பரப்புப்படி வாங்கினவை. இஞ்சாலை இன்னொரு இடத்திலையும் காணி வாங்கினது. அதிலை மூண்டு குடும்பங்கள் இருக்கு…’’
‘‘காணிவாங்கிறதுக்கு இரண்டு இலட்சம் தந்திருக்கினம். வீட்டுத் திட்டங்களும் ஏதாவது தாற மாதிரி…?’’ என்று இடைமறித்த நான், இழுத்தேன்.
‘‘ஓ… நாங்கள் காணி வாங்கிறதுக்குக் காசுக்கு அந்தரப்பட்டுக் கொண்டிருக்க அவை சமுர்த்தியிலை ரெண்டு இலச்சம் லோன் எடுத்துத் தந்தவை. நாங்கள்தான் அதைக் கட்டிக்கொண்டிருக்கிறம்’ என்றார்’’.
அத்தோடு, ‘‘வீட்டுத் திட்டம் தாற மாதிரித் தெரியேல்லை. எல்லாரும் இந்தத் தகரத்துக்க கிடந்து சாகிற நிலமைபோலதான் கிடக்கு. இஞ்சை குடிக்கிற தண்ணியில்லை. கிணத்துத்தண்ணி உப்பு. குடிக்கிற தண்ணிக்கு உங்காலை (கையால் திசை காட்டினார்) போகவேணும். விடியமுன்னம்போய்த் தண்ணி எடுத்துக்கொண்டு வந்திருவம்.
அதைவிட… (அவருடை பேச்சுப் பிசிறு தட்டியது. தெனிப்பில் வித்தியாசம்) மற்றதுக்குப் போறதெண்டாலும் விடியமுன்னமே போயிரவேணும். இங்காலை இருக்கிற சின்னப் பத்தையளுக்கதான். இஞ்சை நிறையச் சின்னனுகள் இருக்கு. இதாலை அதுகளுக்கு வருத்த துன்பம் வந்தாலும் வந்திரும்… அதோடை குமர்ப் புள்ளையள், பொம்பிளையாக்கள் எல்லாருமே இதாலை சரியாக் கஸ்ரப்படுகுதுகள்.
இப்ப எங்களுக்கு ரொய்லெற் கட்டச் சொல்லி அம்பத்தையாயிரம் ரூபா தந்திருக்கு. அந்தக் காசுக்கை ரொய்லெற் கட்டிமுடிக்கிறது கஸ்ரம். அந்தக் காசுக்க சமாளிப்பம் எண்டால் அவை சொல்லுற மாதிரித்தான் கட்டவும் வேணும்… அதுக்கு டபுள் காசு போகும். இப்பதான் காணிக்குக் கடன்பட்டது. கிழமைக்குக் கிழமை அதைக் கட்டவேணும்…’’ இப்போது அவருடைய வார்த்தைகள் தயங்கின. இது அங்குள்ள அவர்போன்றவர்களின் தேக்க நிலையையும், பொருளாதார வறட்சியையும் சுட்டு வதாக உணர்ந்தேன்.
சந்தனத்தரை, மல்லந்தரை என இவர்கள் புதிதாகச் சொந்தமாக்கியிருக்கின்ற இருப்பிடங்கள் மூன்றிலுமே முதன்மையாக இருப்பது இந்த ‘மலசலகூட’ இடரே. அதைச் சமாளிக்கும் எத்தனங்களே தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. தந்தை – மகள், கணவன் – மனைவி என அவர்கள் ஒன்றிணைந்து, கொழுத்திக் கொண்டிருக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, சீமெந்துக் கலவையைக் குழைப்பதிலும், தமக்கான மலசலகூடங்களைக் கட்டிவிடுகிற இதர செயல்களிலும் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெயிலைக் காட்டிலும் அவர்களை அதிகம் வாட்டியெடுப்பது அது.
() () () ()
அங்குள்ள தகரக் கொட்டகைகள் எல்லாமே அண்ணளவில் ஒரே மாதிரி இருந்தன. அதில் ஒன்றில் மேலதிகமாக உயர்ந்த ஒரு தகரப் பந்தல் இணைக்கப்பட்டிருந்தது. இறந்தவீடு என்பதை அது உணர்த்தியது.
இறந்தவரின் மனைவி சோக மயமாகிக் கிடந்தார். இனம்காண அது உதவியது. அவரிடம் துக்கம் விசாரித்து முடிந்தது. அவர் கதைக்கத் தொடங்கினார்.
‘‘அவர் வருத்தக்காரர்தான். ஆனா… வடிவாத்தான் இருந்தவர். முதல் நாள் வேலை செய்த மனுசன். இதிலை கிடந்தவர். இஞ்சை சரியான வெக்கை எண்டாப்போல நான் மகளின்ரை கொட்டிலுக்கைபோய்க் கிடந்தன். விடியப்புறம்போல வந்து பாத்தா ஆள் அசையாமக் கிடந்தார்(அமைதி காத்தார்). நாங்கள் பலாலி உதயகலைவாணி – அண்ணாவீதியடியில இருந்தனாங்கள்.
பலாலி மேற்குப்பக்கம். காணி உறுதியை மட்டும் எடுத்துக்கொண்டு உடுத்த உடுப்போடை வெளிக்கிட்டனாங்கள். அவர் அங்கை செத்தல் மிளகாய் யாவாரம் செய்தவர். இடம்பெயந்ததிலையிருந்து தொழிலுகள் அப்பிடியிப்பிடித்தான். மீன் யாவாரத்துக்குப் போறவர். அவருக்கு வருத்தம் வந்திட்டுது. இதிலை ரெண்டு பரப்புக் காணி வாங்கினது. சமுத்தியிலை லோன் எடுத்தனாங்கள்… கிழமை லோன்…’’ இவரும் இழுத்தார்.
‘‘இனி எப்பிடி லோன் கட்டுவீங்கள்…’’
‘’தோட்டவேலைக்குப் போய்த்தான் கட்டவேணும்’’
‘‘என்ன வேலை?’’
‘‘வெங்காயத் தோட்டத்திலை கூலிவேலை செய்யப்போனால், அறுநூறுரூபா தருவினம்’’
() () () ()
அநேக ஆண்கள் வேலைக்குப் புறப்பட்டுவிட்டார்கள். குழந்தை ஒன்றை ஏணைக்குள்ளிட்டுத் தலாட்டிக் கொண்டிருந்தார் ஒரு தாய். சிறுவர்களைப் பாடசாலை முடித்து அழைத்து வந்தார்கள் சில தாய்மார்.
பாடசாலைப் பருவத்தினர் அனைவரும் பாடசாலைக்குப் போயிருந்தார்கள். தப்பித் தவறியவர்களாகச் சூழ்நிலையால் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். சிலர் குழந்தைகளை இடுப்பில் தாங்கியபடி. முதிய தாய் ஒருவர் கொட்டில் நிழலுக்குள் தஞ்சமடைந்திருந்தார். மற்றைய அனைவரும் ‘மலசலகூட’ கட்டுப்பணியில் வெயில் காய்ந்தனர். இறந்த வீட்டுக்குத் துக்கம் விசாரிப்பதற்கும் ஓரிருவர் வந்துபோயினர். ‘லோன்’ கட்டுவதற்குப் போனவர்கள் ஓரிருவராக இருப்பிடத்துக்கு வந்துகொண்டிருந்தனர். இவை அங்கு கவனித்தவை.
சொந்தக் காணிகளைப் பறிகொடுத்திருக்கிறார்கள். இருந்த இடத்தை விட்டும் எழுப்பப்பட்டுவிட்டார்கள். தனக்குத் தேவையான இடத்தில் நீதியை வழங்கிக் கச்சிதமாக் காரியமாற்றுகிறது நீதிமன்றம். இங்குள்ள அரச கட்டமைப்புக்களும் நீதிமன்றத்துக்குச் சளைத்துவிடவில்லை. இன்றைக்கு வெயிலில் வெந்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஆனால் அதன் பின்னணிகள் எவராலும் கண்டுகொள்ளப்படவில்லை. தீர்வுமில்லை.
‘‘என்ன வெயிலப்பா… என்ன வெக்கையப்பா…’’ என்று சலித்தபடி வீடுக ளுக்குள்ளும் அலுவலகங்களுக்குள்ளும் இன்னும்பிற கட்டடங்களுக்குள்ளும் பதுங்கியிருக்கும் நாமெல்லாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது அவர்களுடன் தங்கியிருந்த கணங்களில் புரிந்தது. அது வலிகளை உணர்ந்த தருணம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!