5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நேற்றுப் பொலனறுவையில் நடந்த “மைத்திரி கைவினை கலா மண்டபத்தை” மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்கள் முகம் கொடுக்க நேரிடும் அழுத்தங்களைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புலமைப் பரிசில் பரீட்சை வறிய மாணவர்கள் வசதி படைத்த பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது பிரசித்த பெற்ற பாடசாலைகளில் இணைவதற்கான போட்டியாக மாற்றம் பெற்றுள்ளது.
பல்கலைக் கழகக் கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பைப் பெறும் பெரும்பாலான மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அல்லர் என்று புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதனால் புலமைப் பரிசில் பரீட்சை இன்று கேள்விக் குறியாக மாறியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!