உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பது நம் கையில் உள்ளது – ஆளுநர்

வடமாகாணத்தின் கல்வித்துறையை சீர்திருத்துவதற்காக கல்விக்கு தன்னை அர்ப்பணித்து அதனை சீர்திருத்தி தரக்கூடிய ஒரு போராளியை நான் கல்வித்துறையின் செயலாளராக நியமித்துள்ளேன் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் யாழ் இந்தியத்துணைத் தூதரகம் வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (21) ஏற்பாடு செய்த உலக யோகா தின நிகழ்வில் கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் கல்வித்துறையை சீர்திருத்துவதற்காக கல்விக்கு தன்னை அர்ப்பணித்து அதனை சீர்திருத்தி தரக்கூடிய ஒரு போராளியை நான் கல்வித்துறையின் செயலாளராக நியமித்துள்ளேன் . கடந்த எட்டுவருடமாக ஆளுநரின் செயலாளராக பாரிய பொறுப்புக்களோடு கடமையாற்றியவர்.

இனி எங்கள் தேசத்தின் அடிப்படையாக இருக்கவேண்டிய கல்வி, நம் தேசத்தின் மைந்தனை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கல்வித்துறையை சீர்செய்வதற்காக கல்வி அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

நாங்கள் ஒரு சமுதாயத்தை அடிப்படையாக பார்க்கும் போது மூன்று விடயங்களை குறித்து அந்த சமுதாயத்தின் உண்மையான தன்மையை உணரலாம். ஒன்று அந்த சமுதாயம் பொது இடங்களை பாவிக்கும் விதம் .

இலங்கையில் மூன்று மடங்கு அதிகமாக வீதிவிபத்திற்கு முகம்கொடுக்கும் ஒரு மாகாணமாக வடமாகாணம் உள்ளது. அதற்கு காரணம் ஒழுங்கின்மை. நேரத்தை பாராமரிக்க தெரியாது நடத்தல் ஆகும். இரண்டாவதாக, ஒரு ஜனசமூகம் தன்னுடைய சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை எப்படி பராமரிக்கின்றது என்பது முக்கிய காரணம் அந்த சமூகத்தின் ஆன்மாவை பற்றி அறிவதற்கு. வடமாகாணத்தை பொறுத்தவரையில் எங்கள் அழுக்குகளை நாங்கள் பராமரிக்கும் விதம் எங்கள் நாகரீகத்திற்கு முரணானது அல்ல.

ஆகையினாலே நகரபிதாவுக்கு நாம் ஒத்துழைக்கவேண்டும். இது எங்கள் நாகரீகத்தின் பிரச்சினை. மூன்றாவதாக, ஒரு சமுதாயத்தின் அடிப்படையை காண்பதற்கு அந்த சமுதாயத்தின் ஆன்மீகத்துறை முக்கியமானதாகும். எனவே இந்த யோகா தினம் எங்கள் சமுதாயத்திற்கும் உங்களுக்கும் எனக்கும் இந்த மூன்று விடயங்களிலும் ஒரு சரியான திசையில் பாதையை அமைப்பதற்கு சரியாக இருக்கட்டும் என்று ஆளுநர் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து, யாழ். இந்து மகளிர் கல்லூரி, விசாலாட்சி சிவகுருநாதர் மண்டபத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மீளும் ஆளுமை அங்குரார்ப்பண நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள் கலந்துகொண்டு குறிப்பிடுகையில்,

வடமாகாணத்தின் ஓர் ஆசிரியர் தன் பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்ற கசப்பான செய்தி வெளிவந்துள்ளது. ஆசிரியர் என்னும் புனிதமான தொழிலில் சில அரக்கர்களும் இருக்கின்றார்கள். ஆனால் இது வெளிவந்த விடயம் போன்று வெளிவராத விடயங்கள் இருக்கலாம். இதற்கு நாம் இடம்கொடுக்கமாட்டோம். மாணவர்களே, உங்கள் மத்தியில் ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் பிரச்சனைகள் , முறைகேடுகள் இருப்பின் நேரடியாக வந்து பயமின்றி ஆளுநர் அலுவலகத்தில் சொல்லுங்கள். நாங்கள் முடிந்தவரை நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம். அசுரர்களை நாம் வெல்லவேண்டும் . உங்களை பாதுகாப்பதும் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதும் நம் கையில் உள்ளது என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!