சம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை!- லக்ஷமன் யாப்பா

அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தற்போதைய அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “தற்போது இருக்கின்ற அதிகாரங்கள் இப்போது போதுமானவை. 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த தடையில்லை. ஆனால் 13வது திருத்தத்திற்கும் அப்பாற் செல்வதாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உட்பட பொதுமக்கள் கருத்துக் கணிப்பிற்கு முதலில் செல்ல வேண்டிவரும்.

இவை குறித்து தற்போதிருக்கும் அரசாங்கத்திடம் பேசவேண்டும். மாறாக அமெரிக்கத் தூதுவருடன் சம்பந்தன் பேசி பயனில்லை. இங்குள்ள அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கத் தூதுவருக்கு முடியாதுதானே.

ஆகவே வெளிஅழுத்தங்களை ஏற்படுத்தி இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தல் உறுதிபடுத்திவிட்டது. இவர்களது வாக்குகள் இல்லாவிட்டால் ஜனாதிபதி தெரிவு செய்யமுடியாது என்ற விடயம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே அனைத்து நாடுகளையும் நட்புறவைப்பேணி, எமது சுயாதீனத்தை, அடையாளத்தை வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!