தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு? – தமிழக அரசு ஆலோசனை!

தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு , தேர்தல் பிரசாரத்தால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஏப்ரல் 2-வது வாரம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியமர்த்தல் ஆகியவை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, கோவை, செங்கல்ப்பட்டு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 4 ஆம் மற்றும் 5-ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் மீண்டும் செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 4-ம், 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுப்படி வழிபாட்டு தலங்கள், மத நிகழ்ச்சிகள், அரசியல், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

பொதுப்போக்குவரத்தில் சில கட்டுப்பாடுகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!