ஒற்றுமை முயற்சிக்கு ஏனைய கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு ஏனைய கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
   
தமிழ் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமைக்கும் முயற்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நாம் தொடர்ச்சியாக அரசியல் தலைமைகளின் ஒற்றுமைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம் தனிப்பட்ட ரீதியாகவும் மற்றவர்களுடன் பேசி பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

இது ஒரு தனி ஒரு மனிதன் செய்யக்கூடிய விடயமல்ல அன்று இருந்த அரசியலுக்கும் இன்றுள்ள அரசியலுக்கும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றது.

ஆனால் எல்லாருமாக ஒற்றிணைந்து ஒற்றுமையுடன் முயற்சியை முன்னெடுத்து எல்லா கட்சிகளின் மத்தியிலும் ஒரு ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும்.

முதலில் ஆக குறைந்தது தமிழ்தேசிய பரப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் நாங்கள் ஒற்றமைபட்டு ஒன்றுபடுவோமாக இருந்தால் அடுத்த கட்டமாக ஒரு பலமான தேசிய அரசியல் அமைப்பாக வந்து தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் .

ஆகவே மாவை, சுரேஷ், செல்வம் போன்ற அனைவரும் இணைந்து இந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என மேலும் தெரிவித்துள்ளார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!