பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சங்க் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஜுலி ஜே.சங்க், பிரதமரை சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

    
இலங்கையுடன் காணப்படும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறவினை மேலும் பலப்படுத்தி, அந்த உறவை மேம்படுத்துவதற்கு தான் முயற்சிப்பதாக அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சங்க் இதன்போது தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக பேணுவதற்கு உதவுவதாக தெரிவித்த ஜுலி ஜே.சங்க் , இந்நாட்டின் வலுசக்தி மற்றும் சுற்றுலா துறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு உதவுவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படும் உறவை அவ்வாறே தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, புதிய பதவியில் வெற்றிகரமாக பணியாற்றுவதற்கு ஜுலி ஜே.சங்க் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!