பசிலை அமெரிக்காவுக்கு விரட்டும் வரை ஓயப்போவதில்லை!

பசில் ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் வரை தமது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தெரிவித்தார்.
    
கொழும்பில் நேற்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தான் எரிசக்தி அமைச்சராக இருந்த காலத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 7 ரூபாயினால் அதிகரித்த போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தன்னை பதவி விலகுமாறு கோரியதாக குறிப்பிட்டார்.

ஒரு லீற்றர் டீசலின் விலை தற்போது 55 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது எம்.பி காரியவசம் என்ன நடவடிக்கை எடுப்பார் என கம்மன்பில கேள்வி எழுப்பினார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் தான் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டதன் காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சில அமைச்சர்கள் கூறுவதாக சுட்டிக்காட்டினார்.

எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம் அரசாங்கம் நாளாந்தம் 750 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டுவதாகவும் மருந்து, எரிவாயு மற்றும் கோதுமை மாவுக்கு எவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

வெளிநாட்டு கையிருப்புகளை நிதியமைச்சர் தவறாக நிர்வகித்ததன் காரணமாக ஏற்பட்ட டொலர் பற்றாக்குறையே தற்போது நிலவும் அனைத்து தட்டுப்பாடுகளுக்கும் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் குறைபாடுகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி சுமத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் அழைப்பை நிராகரித்ததால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி தோல்வியடைந்ததாக கம்மன்பில தெரிவித்தார்.
பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சித்ததாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!