பிரான்ஸில் அத்துமீற முயன்றவரின் நாக்கை கடித்த பெண்மணி!

பிரான்ஸில் 57 வயது பெண் மீது பாலியல் அத்துமீறல் செய்தவரின் நாக்கை கடித்து, அதனை காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரான்ஸிலுள்ள மார்சேயில் இருந்து வடக்கே 100 கிமீ தொலைவில் உள்ள எவிக்நோன் என்ற பகுதியில், பெண்கள் தங்களது நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

அவ்வாறு தனது நாயை 57 வயதான பெண்மணி ஒருவர் நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் அவரை கட்டி அணைத்து வலுக்கட்டாயமாக முத்தமிட முயற்சித்திருக்கிறார். அவரிடமிருந்து தன்னை மீட்க போராடிய பெண்மணி அவரது நாக்கை கடித்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

வீடு திரும்பிய பெண் தனது சகோதரனிடம் நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியுள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் சகோதரனுடன் சேர்ந்து புகார் அளித்துள்ளார். மேலும் பெண்மணி கடித்த அவரது நாக்கின் ஒரு பகுதியை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார். புகாரில் அந்த நபர் தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும், கால் சட்டைக்குக் கீழே தொடைப்பகுதியில் கை வைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து துனிசியாவை சேர்ந்த 30 வயதுடைய அந்த நபரை காவல் துறை கைது செய்துள்ளது. மேலும் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் சட்ட விரோதமாக குடியிருக்கும் வெளிநாட்டவர் என்றும், அவரை நாடு கடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!