வடக்கு மாகாண சபையில் சட்டவலுவான அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதியின் பின்னர் இல்லை என்ற கருத்தைப் பதிவு செய்வதுடன், இனிமேலும் அமைச்சரவை விவகாரம் தொடர்பில் சபை அமர்வில் விவாதிப்பதில்லை என்று நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 132ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. அமைச்சரவை விவகாரம் தொடர்பில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சிறப்பு அறிவிப்பை சபையில் முன்வைத்தார்.
“மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால கட்டளை வழங்கிய ஜூன் மாதம் 29ஆம் திகதியிலிருந்து சபைக்குப் பொறுப்புச் சொல்லக் கூடிய சட்டவலுவான அமைச்சரவை இல்லை. நீதிமன்றின் உத்தரவு தமக்கு வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள், அமைச்சின் செயலர்கள் நிலைப்பாடு எடுத்தால் அது அவர்களுக்கு பின்னர் சிக்கலை ஏற்படுத்தும். நீதிமன்றம் தனது உத்தரவை வீடு வீடாகவோ, திணைக்களங்களுக்கோ தனித் தனியாக வழங்க முடியாது” என்றார் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்.
எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, அமைச்சர்கள் யாரென்று தெரியாத நிலையிலும், ஒவ்வொருவரும் தாங்கள் அமைச்சர் என்று தெரிவித்து கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தச் சபையில் இதேபோன்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஒட்டி, தலைமைச் செயலருக்கு அமைச்சர்களுக்கான சம்பளம் வழங்கவேண்டாம் என்று கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனாலும் அமைச்சர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், நீதிமன்றில் கூற வேண்டிய வியாக்கியானங்களை சபையில் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கு மாகாண ஆளுநர்தான் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆளுநர் பார்க்க வேண்டிய வேலையைச் சபை செய்து கொண்டிருக்கின்றது. அரசியல் உள்நோக்கத்துக்காக சபையில் இந்த விடயம் எடுக்கப்படுகின்றது. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவேண்டியது ஆளுநரே. சபை அல்ல”-என்றார்.
மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, ஆளுநர் தான் எடுக்க வேண்டிய நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டக்கூடாது என்று அறிவித்தல் வழங்கியுள்ளார். அமைச்சர்களின் பெயர்களைத் தர வேண்டும் என்று ஆளுநர் கோரியுள்ளார் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவுக்கும், சர்வேஸ்வரனுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்களான ச.சுகிர்தன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த விவாதத்தின் பின்னர், அமைச்சரவைக் குழப்பம் தொடர்பில் சபை அமர்வில் இனிப் பேசுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் ஒக்ரோபர் மாதம் 23ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அடுத்த மாதம் இரண்டு அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!