ரணிலைத் தேடி வந்த ஆபத்து- மயிரிழையில் தப்பினார்!

பாரிய விபத்து ஒன்றில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராஜகிரியவில் மரண வீடு ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மீண்டும் திரும்பும் போது இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதமரை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் ரணில் உயிர் தப்பியுள்ளார். எனினும் அவரின் பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் நெருக்கமான உறவினரின் மரண வீட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ராஜகிரிய பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி வரும் போது, அந்த வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரதமரின் வாகனத்தில் ஏறும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் வருகை காரணமாக மரண வீடு உள்ள பிரதேசத்திற்கு பொலிஸார் வருகைத்தந்துள்ளனர். இதன் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை காட்டியுள்ள போதிலும், நிறுத்தாமல் பாதுகாப்பு அதிகாரிகள் மீது மோதியுள்ளார்.. இதன் போது தெய்வாதீனமாக பிரதமர் தப்பியுள்ளார் என கூறப்படுகின்றது.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார், மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் அனுமதி பத்திரம் இல்லாத 20 வயதுடைய இளைஞர் எனவும், அவர் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!