புதிய அரசமைப்பு வரும், ஆனால் வராது! – என்கிறார் டக்ளஸ்

புதிய அரசமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள். அது அப்பட்டமான பொய். தமிழ் மக்களை ஏமாற்றும் செயல், என்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழு கூட்டம் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் நடைபெற்றிருந்தது. இதன்போது புதிய அரசமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என்பது அர்த்தமல்ல. உண்மையில் ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சியே. இது தமிழ் மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயல் எனவும் நான் கூறியிருந்தேன்.

அதனை ஏற்றுக் கொண்டு டக்ளஸ் தேவானந்தா கூறுவதில் நியாயம் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். ஆனால் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் என்னை நோக்கி நாட்டை பிரிக்க போகிறீர்களா? நாட்டை குழப்பப் போகிறீர்களா? என வினவினார். அதற்கு நான், மக்களை உசுப்பேத்தவில்லை. நீங்கள்தான் மக்களை உசுப்பேத்தினீர்கள். எதற்காக மக்களை உசுப்பேத்தினீர்கள்? எனக் கேட்டேன்.

அப்போது பிரதமர் ரணில் தலையிட்டு தமிழ் மொழி தெரியாவிட்டாலும் ஏதோ பிரச்சினை உள்ளது. என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். ஆகவே தமிழ் மொழியில் புலமை பெற்றவர்களை அழைத்து பேசி தீர்மானிக்கலாம் என கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் ஊடகங்கள் ஒருபக்க கருத்துகளை மட்டும் செய்தியாக்குகின்றன. ஆனால், எங்களுடைய பக்கத்தில் உள்ள கருத்துகளை அவர்கள் கருத்தில் எடுப்பதில்லை என்றார்.

தொடர்ந்து புதிய அரசியலமைப்பு வருமா? வராதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இந்த கேள் விக்கு என்னுடைய பதில் வரும், ஆனால் வராது என்பதே என்றார்.

ஆகையால், புதிய அரசமைப்பு உருவாக்க விடயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அதில் முன்னேற்றகரமான விடயங்கள் இருந்தால் அதனை நாங்கள் வரவேற்போம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!