யாழ்ப்பாணத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் தொடர்பில் ஆராயும் நேற்றைய கலந்துரையாடலில், கடற்படையினர் தமது வசமுள்ள தனியார் காணிகள் உள்ளிட்ட எந்தவொரு காணிகளையும் விடுவிப்பதற்கு இணங்கவில்லை. இராணுவத்தினர், தமது வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வாரம் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான சிறப்புச் செயலணியின் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள தனியார் காணிகளை டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என்றும், அதற்காக இரண்டு மாகாணங்களின் ஆளுநர்கள் தலைமையில் குழுவும் நியமிக்கப்பட்டது.
பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. முப்படையினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வலி. வடக்கில், கட்டுவன் – அச்சுவேலி பாதையினை திறப்பதோடு, குரும்பசிட்டியில் எஞ்சியுள்ள காணிகளையும், பலாலி வீதியின் கிழக்குத் திசையில் உள்ள காணிகளையும் விடுவிக்க வேண்டும். மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் விடுவிக்கப்பட்டபோதும் மிக நெருக்கமாகவே இராணுவ வேலிகள் உள்ளன. அவற்றை மேலும் பின்நகர்த்த வேண்டும். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மேலும் 5 பாடசாலைகள் உள்ளன. அவற்றையும் விடுவிக்க வேண்டும், என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த இராணுவக் கட்டளைத் தளபதி ஹெட்டியாராச்சி, காணி விடுவிப்புத் தொடர்பில் ஆராயப்படுகின்றது. பாடசாலைகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் விடப்பட வேண்டும் என்று ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
வடமராட்சியில் 7 இராணுவ முகாம்கள் உள்ள நிலையில் அதில் 4 பெரிய முகாம்களுக்காக தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அவை விடுவிப்பதற்கு தாமதம் தேவையில்லை. அதில் உள்ள அரச காணியை மட்டும் வைத்திருந்தால் முகாமின் அளவு சிறிதாகுமே அன்றி உடனடியாக விலக வேண்டிய நிலைமை இல்லை. தனியார் காணிகள் அனைத்தையும் உடன் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.
வடமராட்சி பகுதியில் உள்ள தனியார் காணிகளை வழங்குவதில் அதிக நெருக்கடி இருக்காது. அந்தப் பகுதிகளில் பல அரச காணிகள் உண்டு. ஆனால் படை முகாம்களை இடம்மாற்றுவதற்காக அதிக செலவு ஏற்படுகின்றது. அதற்கான நிதி கிடைக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி கூறியுள்ளார். அடுத்த ஆண்டும் பாதுகாப்பு அமைச்சுக்குத்தானே அதிக நிதி ஒதுக்கியுள்ளனர். அந்த நிதியில் இதற்கும் பெற்றுக்கொண்டு நிலத்தை விடுவிக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் பிரதேச சபையின் காணியும் மற்றுமோர் இடத்தில் மக்கள் குடியிருப்பின் நடுவே உள்ள இராணுவ முகாமையும் அகற்ற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கோரிக்கை விடுத்தார்.
அரியாலைப் பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஓர் தாயாரின் 6 பரப்புக்காணி உள்ளது. அதனை விடுவிக்குமாறு அவர் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கின்றார். அந்த 6 பரப்புக்காணி தொடர்பிலும் கரிசனை கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவத்தினர் காணிகள் விடுவிப்பதற்கான சாதகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
நெடுந்தீவு, வேலணை, மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினர் காணிகளை பிடித்து வைத்திருப்பதனால் அவற்றை விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரிக்கை விடுத்தார். காரைநகரில் மட்டும் 8 இடங்களில் கடற்படையினர் கையப்படுத்தி வைத்துள்ளனர்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் 8 பரப்புக் காணி உள்பட அந்தப் பகுதிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனும் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைகளுக்கு கடற்படையினர் பதில் வழங்கவில்லை. மேலும், கடற்படையினர் தமது கட்டுப்பாட்டிலுள்ள எந்தவொரு காணியையும் விடுவிப்பதற்கு கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கவில்லை.
இதேவேளை நேற்றைய கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இராணுவத்தினர் அதிகமான நிலங்களை விடுத்துள்ளார்கள். கடற்படையினர் விடுவித்த நிலங்கள் மிகக் குறைவு. தரவுகளை கொடுத்துள்ளோம். காணிகளை எப்போது எவ்வளவு விடுவிப்பீர்கள் என்ற கால அட்டவணையைத் தருமாறு கோரியுள்ளோம். இராணுவத்தினர் காணிகளை விடுவித்தாலும் இன்னமும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த காணிகளை விடுவிப்பதற்கு ஏற்கனவே முடிவெடுத்துள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.
புதிய பொலிஸ் நிலையங்கள் அமைப்பது பற்றி கதைத்தார்கள். அனலைதீவுப் பகுதியில் பொலிஸாரின் பிரசன்னம் இல்லை. நீதிமன்றத்தால் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் அங்கு போய் ஒளிந்து கொள்ளும் நிலை காணப்படுகிறது. பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு காணிகள் கொள்வனவு செய்யப்பட வேண்டும்.
சில பொலிஸ் நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் 2020, 2022 ஆம் ஆண்டுகளில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி ஆளுநர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. நாம் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் நேர அட்டவனைகளை 22ஆம் திகதி கூட்டத்துக்கு கொண்டு வருவதாக கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் 8ஆம் திகதி மீண்டும் அரச தலைவர் செயலணி கூடுகின்ற போது முனேற்றங்களை ஆராய முடியும் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!