கரலியத்தை கிராமத்தைச் சேர்ந்த சாலிஸ் முதலாளி அந்தக் கிராமத்துக்கே தலைவர் போன்றவர். பாதிக் கிராமத்துக் குச் சொந்தக்காரர். இறப்பர், தேயிலை, தேக்கு, தென்னந்தோட்டங்களுக்கும், பல ஏக்கர் வயல்நிலத்துக்கும் சொந்தக்காரர். இவைகள் அனைத்தையும் தனித்து பாதுகாப்பது சிரமமென உணர்ந்த சாலிஸ் முதலாளி, அண்டைக் கிராமங்கள் சிலவற்றிலிருந்து தொழிலாளர்களைக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கமர்த்தி தமது தோட்டங்களைப் பராமரிப்பித்து வந்தார்.
தமது தோட்டங்களிலேயே அந்தத் தொழிலாளர்கள் தங்கி வாழ்வதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தார். அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தது. சாலிஸ் முதலாளி முதுமையடைந்த வேளை, அந்தத் தொழிலாளர்களது பிள்ளைகளே அவரது தோட்டங்களில் வேலை செய்து வந்தனர்.
அது மட்டுமன்றி, சாலிஸ் முதலாளியால் ஆரம்பத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களது பேரப்பிள்ளைகளும் கூட அந்த வேளையில் தோட்டங் களில் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அதிக காலம் கழிவதற்கு முன்னர் அந்தத் தொழிலாளர்கள் வாழ்ந்த இடங்கள், வீடுகள், அவர்கள் வேலைசெய்த முதலாளியின் தோட்டங்கள் அந்தத் தொழிலாளர்களுக்குச் சொந்தமாகின.
அவற்றுக்கான உறுதிகளையும் அந்தந்தத் தொழிலாளர்களால் பெற முடிந்தது. அந்தத் தொழிலாளர்களது பூர்வீக கிராமங்களது உறவினர்கள், குறித்த தொழிலாளர் தரப்புக்காக உரிமை கோரி சாலிஸ் முதலாளியுடன் மோதல்களில் ஈடுபட்டனர். சாலிஸ் முதலாளி யின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்கூட அந்த இடங்களுக்கு உரிமை கோர இயலாது போயிற்று.
சாலிஸ் முதலாளி யால் மெளனம் காப்பதைவிட வேறெதனையும் செய்ய இயலாது போயிற்று. மிகப் பெறுமதி வாய்ந்த தமது பெரும் சொத்துக்களை இழக்க நேர்ந்த கரலியத்த கிராமத்து சாலிஸ் முதலாளியின் கதையின் ஆரம்ப,மத்திய, முடிவுகள் இவை!.
கீழே குறிப்பிடப்படவுள்ள கதையின் ஆரம்பத்தை இலங்கையின் பழைய அரசியல் வரலாற்றை அறிந்தோர் நன்கறிவர். நடுப்பகுதி குறித்து விளக்கிக் கூறக் கூடியதாயிருக் கும். முடிவு எவ்வாறிருக்கும் என்பது குறித்து இப்போது எதுவும் உறுதியாகக் கூற இயலாது.
ஜே.ஆரின் கடைசிக் கால அரசியல் வாழ்க்கை
பரிதாபகரமானது
1980துகள், அவ்வேளையில் 80 வயதைத் தாண்டிய ஜே. ஆரது அரச தலைவர் பதவியின் முடிவுக்காலம். 1987ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜே. ஆர் அரசியலில் கழுத்தில் கயிறு இறுகிய நிலையில் செயற்பட நேர்ந்தது. இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா பாரதூரமான விதத்தில் தலையீட்டை ஆரம்பித்திருந்தது. பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிப் போராளிகள் தமிழ் நாட்டைக் கைவிட்டு இலங்கைக்குத் திரும்பிவிடத் தீர்மானித்திருந்த னர்.
ஜே. ஆர், யாழ்ப்பாணத்துக்கு இராணுவத்தை அனுப்பி விடுதலைப் புலிகளை நலிவுபடுத்துவதை தமிழ் நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்களெனக் கருதிய இந்திய அரசு, யாழ் குடாநாட்டில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசை வற்புறுத்தி வந்தது. இதற்காக இந்திய மத்திய அரசின் அமைச்சரான தினேஸ் சிங் இலங்கைக்கு நேரில் வந்து ஜே. ஆரைச் சந்தித்திருந்தார்.
நல்லெண்ணத்தை இந்தியாவுக்கு வௌிப்படுத்தும் விதத்தில் பிரிவினைவாதப் போராளிகளுடன் எட்டு நாள்களுக்குப் போர் நிறுத்தமொன்றை ஜே. ஆர் அறிவித்தார். அந்தப் போர் நிறுத்தம் நடைமுறையிலிருந்த நாள்களில், திருகோணமலையிலி ருந்து கொழும்புக்கு பஸ்ஸில் பயணித்த 130 பயணிகளை விடுதலைப்புலிகள் சுட்டுப் படுகொலை செய்திருந்தனர்.
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 150 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
ஜே.ஆரின் வடமராட்சி இராணுவ நடவடிக்கை
இந்தியாவின் தலையீட்டுக்கு வழிவகுத்தது
தாம் கடும் அரசியல் அநாதை நிலைக்கு உட்படுவதாக உணர்ந்த ஜே. ஆர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடமராட்சி இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தார். 1987ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை, 10 நாள்களாகத் தொடர்ந்து இடம் பெற்றது.
இராணுவத்தினரில் 29 பேரும், விடுதலைப் புலிகளில் நூறு பேர் வரையானவர்களும் அந்த நடவடிக்கையில் உயிரிழக்க நேர்ந்தது. விடுதலைப் புலிப் போராளிகள் பின்வாங்கிச் சென்றதுடன், தமிழ் நாட்டிலிருந்து போராளிகள் மற்றும் பேராயுதங்களை வடபகுதிக்குக் கொண்டுவர விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வடகிழக்கு கடற்பிராந்தியத்தை இலங்கை இராணுவத் தரப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
‘‘அந்த வேளை யில் இந்திய அரசு தலையிட்டிருக்காதுவிட்டால், விடுதலைப் புலிகளை எம்மால் முற்றாகத் தோற்கடித்திருக்க முடிந்திருக் கும்.’’ என வடமராட்சி இராணுவ நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய பிரிகேடியர் விஜய விமலவர்தன பின்ன ரொரு சமயம் தெரிவித்திருந்தார்.
‘‘யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இலங்கை இராணுவம் முயலுமானால், அதை இந்திய அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது’’ என அந்த வேளையில் இந்தியத் தூதுவராக இங்கு கடமையாற்றிய ஜே. என். டிக்சிற், அந்த வேளைய இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத்முதலிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
உணவுப் பொருள்கள் தட்டுப்பாட்டால் வாடிய பொதுமக்களுக்கு உதவவென தமிழ்நாடு அரசின் அழுத்தம் காரணமாக இந்திய அரசு 20 மீன்பிடி வள்ளங்களில் உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள்களை வடபகுதித் தமிழர்களுக்கென அனுப்பி வைத்தது.
ஆயினும் இலங்கைக் கடற்படையினர் அந்தப் படகுகள் வடபகுதிக்குச் செல்லத் தடைவிதித்து, அவற்றை மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி வைத்திருந்தனர். இதனால் ஆத்திரமுற்ற இந்திய மத்திய அரசு, பன்னாட்டு சட்டநடைமுறைகளை மீறும் வகையில், ஆகாய மார்க்கமாக உணவு மற்றும் மருந்து வகைகள் அடங்கிய 22 தொன் பொருள்களை வடபகுதி மக்களுக்கு விநியோகித்தது. அது இந்திய மத்திய அரசு தமிழ்ப் பிரிவினை வாதிகளுக்குப் பகிரங்கமாக உதவிய நிகழ்வாக அமைந்தது.
இத்தகைய பின்னணியில் அரசியல் ரீதியிலான பிறநாடுகளது உதவிகள் ஜே. ஆரைவிட்டுத் தூர விலகத் தொடங்கின. நாடு அரசியல் ரீதியில் அராஜக நிலைக்குத் தள்ளப்பட்டு வந்தது. இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியுடன் இலங்கை அரசு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது குறித்து பல்வேறு தரப்புக்களினின்றும் விமர்சனங்கள் தலைதூக்கின.
ஜே.ஆர் அத்தகைய அழுத்தங்களால் குழுப்பமுற்ற போதிலும், கடைசியில் ராஜீவ்காந்தியுடன் ஒப்பந்த மொன்றை மேற் கொள்ள இணங்கினார். வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக ஒன்றிணைத்து, நடைமுறையில் இருந்துவந்த அவசரகாலச் சட்டத்தை நீக்கி, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடத்தும் இந்தியத் தரப்பின் யோசனைக்கு ஜே.ஆர் இணங்க வேண்டியதாயிற்று.
நாடு பெரும் பரபரப்பான நிலையில் இருந்த வேளை, 1987 ஆம் ஆண்டின் ஜீலை மாதம் 29 ஆம் திகதியன்று இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய த ைலமை அமைச்சர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அரச தலைவர் ஜே. ஆர் ஆகியோரால் கொழும்பில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டது.
ஜே.ஆர்.ராஜீவ் இடையேயான
இலங்கை –இந்திய ஒப்பந்தம்
குறித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பல முக்கியமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இலங்கையின் இறைமை, சுயாதீ னம், மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணும் வகையிலும், நாட்டில் பல்லின,மற்றும் பல்வேறு மொழிகள் பேசும் இனக்குழுமங்களைப் பேணும் வகையிலும், வெவ்வேறு கலாசார மற்றும் மொழி தனித்துவங்களைக் கொண்ட இனக் குழுமங்களுக்கான பகுதிகள் நாட்டில் உள்ளன என்பதை ஏற்கும் வகையிலும் நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந் தது.
தமிழ் பேசும் மக்கள் ஏனைய இனக் குழுமங்களுடன் இணைந்து வாழ்ந்து வந்த நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், தமிழ் மக்களது பாரம்பரிய வாழ்விடங்களென எற்றுக் கொள்ளும் வகையிலும், தற்காலிகமாக இணைக்கப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், மற்றும் ஏனைய மாகாணங்களிலும் தேர்தல் மூலம் மாகாண சபைகளை உருவாக்கவும் ஒப்பந்தம் வழி வகுத்திருந்தது.
அவை மட்டுமன்றி மாகாணசபைகளை எவ்விதம் உருவாக்கி, செயற்பட வைப்பிப்பது என்பவை தொடர்பாகவும், இலங்கை அரசுக்கு எதிரான தமிழ்ப் போராளிகள் தரப்புக்களை எவ்விதம் கட்டுப்படுத்துவதெனவும், இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்குக் கூட்டிவருவது தொடர்பாகவும், இலங்கையிலுள்ள குடியுரிமைக்குத் தகுதியற்ற இந்தியத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அழைப்பதுபற்றியும் இரு நாடுகளும் குறித்த ஒப்பந்தத்தின் மூலம் இணங்கிக் கொண்டன.
சிங்களம் இலங்கையின் அரச கரும மொழி என்பதுடன் தமிழும் ஆங்கிலமும் அரச மொழிகளாகப் பேணப்படுமெனவும் இணக்கம் காணப்பட்டிருந்தது.
அரசியல் சிக்கல் முடிச்சை அவிழ்க்க வழி தெரியாது
தடுமாறிய ரணில்
ரணில் விக்கிரமசிங்க உறவு முறையில் ஜே. ஆரின் மருமகன். கடைசியாக நாட்டின் தலைமை அமைச்சராகப் பதவியேற்ற கொஞ்சக் காலத்துக்குள்ளேயே, ரணில் கடும் அரசியல் சிக்கல் களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. கழுத்துக்கு அண்மையாக கத்தி வந்த நிலை. அரசியல் ரீதியில் குழப்பத்துக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டது. ஒரேயொரு ஆபத்பாந்தவ தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, இந்தியாவின் கைப்பொம்மையே. இந்திய அரசின் வழிகாட்டலின் படியே அவர்கள் செயற்படுகின்றனர். முக்கிய பிரச்சினைகள் தலை தூக்கும்போது கூட்டமைப்பின் தலைவர் இந்தியாவுக்கு ஓடுவதற்கான இரகசியம் இதுவே.
கடந்த ஏப்ரல் 4ஆம் நாள் ரணிலின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் நாளாக அமைந்தது. தம்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத் தைத் தோற்கடிக்க வேண்டுமானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ரணிலுக்கு அவசியமாகியிருந்தது. வழக்கம்போன்று பல்வேறு நிபந்தனைகள் ரணிலின் முன்னிலையில் முன்வைக்கப்பட்டன.
கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பத்து நிபந்தனைகளை ஏற்றதன் மூலமே ரணில் தமது தலைமை அமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற இக்கட்டு நிலை. ரணிலுக்கு வேறு வழியேதும் இருக்கிவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நிபந்தனைகளும் ரணிலால் ஏற்கப்படுகின்றன. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற விதத்தில் ரணிலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
ரணில் – சம்பந்தன் உடன்பாடு
வடக்கு– கிழக்குப் பிரச்சினைக்கு உடனடி அரசியல் தீர்வு, அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுதல், படையினர் வசமுள்ள தமிழ் மக்களது காணிகளை விடுவித்தல், விசாரணை களின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனோர் தொடர்பாக நட வடிக்கை மேற்கொள்ளல், வடக்குக் கிழக்கு பகுதி மக்களது உரிமைகளைப் பாதுகாத்தல், தமிழ்ப் பகுதிகளின் இளைஞர் யுவதிகளது வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு, வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு வடக்கு– கிழக்கு பகுதிகளில் நியமனங்கள் வழங்காதிருத்தல், வடக்கு –கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும்போது, தமிழர்களுக்கு வாய்ப்பளித்தல். வடக்கு கிழக்கு மாகாணங்களது அபிவிருத்திச் செயற்பாடுகளில் அந்தந்த மாகாண சபை நிர்வாகங்களது கருத்துக்களை உள்வாங்கிச் செயற்படுதல் என்பவையே அந்த பத்து நிபந்தனை களுமாகும்.
மேற்கண்ட நிபந்தனைகள் செயல்வடிவம் பெறுமா? என்பது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. 1987ஆம் ஆண்டில் ரணிலின் மாமனாரான ஜே. ஆர் விடுதலைப் புலிகளுக்கு போர் நிறுத்த வாய்ப்பை வழங்கிய போதிலும், அவர்கள் அதற்கு எதுவித மதிப்பும் கொடுக்கவில்லை. 2002ஆம் ஆண்டில் ஜே. ஆரின் மருமகன் ரணில் விடுதலைப் புலிகளுக்கு போர் நிறுத்த வாய்ப்பை வழங்கியவேளையிலும் அவர்கள் அதற்கும் கூட எதுவித மதிப்பும் கொடுக்காது போரை முன்னெடுத்தனர்.
அந்த வகையில் பார்க்கும்போது, பாம்பென்று நினைத்து பிடித்திருந்த கைப்பிடி யைக் கைவிடவோ, இல்லை யேல் அது பழுதைதான் ( வைக்கோல்புரி ) என்று நம்பி கைப்பிடியை இறுகப் பற்றிக்கொள்ளவோ இயலாத நிலையில் ரணில் குழும்பிப் போக நேர்ந்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!