திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை ஆற்றில் தள்ளி கொன்ற காதலன்!

குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). நர்சிங் படித்துள்ளார். இவர் தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ஸ்ரீஜா, அதன் பின்பு வீடு திரும்பவில்லை.

இதனால் உறவினர்கள் ஸ்ரீஜாவை தேடிவந்தனர். தோழிகளிடமும் கேட்டனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் குழித்துறை ஆற்றில் ஒரு இளம்பெண் பிணம் கடந்த 21-ந் தேதி காலையில் மிதந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக மிதந்த பெண் யார்? என்று விசாரித்தனர். இதில் அவர் தேங்காய்பட்டினம் உறவினர் வீட்டில் இருந்து மாயமான ஸ்ரீஜா என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஸ்ரீஜாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஸ்ரீஜாவின் உடலை அடையாளம் காட்டியதோடு, அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறினர். பின்னர் ஸ்ரீஜாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு குழித்துறை அருகே மஞ்சரவிளை பகுதியில் மருதங்கோடு – களியக்காவிளை சாலையில் மறியல் போராட்டமும் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அதன்பின்பு போலீசாரின் விசாரணை தீவிரமானது. மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்தது. அதில் ஸ்ரீஜா 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. திருமணத்திற்கு முன்பே ஸ்ரீஜா, கர்ப்பமாக இருந்ததால் அவரது சாவில் மர்மம் இருப்பதை புரிந்து கொண்ட போலீசார், ஸ்ரீஜாவின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என விசாரித்தனர். இதில் நித்திரவிளையை அடுத்த எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் பிபின் (26) என்பவரை ஸ்ரீஜா காதலித்து வந்தது தெரியவந்தது. போலீசார் பிபினை தேடி சென்றனர். அங்கு அவர் தலைமறைவாகி இருந்தார். இதனால் ஸ்ரீஜா சாவில் பிபினுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த போலீசார் அவரை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர். களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் பிபினை கண்டு பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தான் ஸ்ரீஜாவை ஆற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் பிபினை கைது செய்தனர். பின்னர் அவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கூறியதாவது:- நித்திரவிளை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த ஸ்ரீஜாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தோம். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக நான் ஆசை வார்த்தை கூறினேன்.

இதனால் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். இதில் ஸ்ரீஜா கர்ப்பம் ஆனார். இது பற்றி ஸ்ரீஜா என்னிடம் கூறினார்.ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த போது அவர் 5 மாத கர்ப்பம் ஆக இருப்பது தெரியவந்தது. கர்ப்பிணி ஆனதும் ஸ்ரீஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த 19- ந் தேதி இரவு நான் ஸ்ரீஜாவை சந்தித்து என்னுடன் வருமாறு கூறினேன். நாங்கள் இருவரும் குழித்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று கர்ப்பத்தை கலைத்துவிட முடிவு செய்தோம். கர்ப்பமாகி 5 மாதம் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று ஆஸ்பத்திரியில் கூறிவிட்டனர்.

இதை கேட்டதும் ஸ்ரீஜா என்னிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரச்சினை செய்தார். இதில் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே நான் அவரை குழித்துறை ஆற்று பாலம் அருகே அழைத்து வந்தேன். அங்கு ஸ்ரீஜாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென அவரை ஆற்றில் தள்ளிவிட்டேன். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.அவர் இறந்தது தெரிந்ததும் நான் தலைமறைவாகி விட்டேன். ஆனால் போலீசார் என்னை தேடி கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் போலீசில் கூறியுள்ளார். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!