123 வாக்குகளுடன் நிறைவேறியது மகிந்தவின் செயலகத்துக்கான நிதி வெட்டு பிரேரணை

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகத்துக்கான, நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தம், பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 123 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை மீது நடத்தப்பட்ட விவாதத்தை அடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது 123 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். எந்தவொரு வாக்குகளும் எதிராக அளிக்கப்படவில்லை.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த எந்த ஒரு உறுப்பினரும் பங்கேற்கவில்லை.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச தரப்புக்கு தாவிய அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி சுதந்திரமான உறுப்பினராக செயற்பட அத்துரலிய ரத்தன தேரரும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றனர். இவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அதேவேளை, மகிந்த தரப்புக்கு தாவி அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டபின், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு திரும்பி வந்த வசந்த சேனநாயக்க, இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, நாடாளுடன்றம் நாளை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!