சாவகச்சேரி மற்றும் மட்டுவில் பகுதிகளில் வாள்களுடன் நடமாடிய கும்பல் 3 வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த உடைமைகளை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது. பெற்றோல் குண்டு வீசியும் அந்தக் குழு தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் இரவு 11 அளவில் மட்டுவில் தெற்குப் பகுதியில் வீடு புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அவர் புன்னாலைக்கட்டு வன் பிரிவு கிராம அலுவலராகப் பணிபுரிகிறார். வெளிக்கதவை உடைத்து வாள்கள் கோடரியுடன் ஆறு பேர் உட்நுழைந்ததைக் கண்டு வீட்டிலுள்ளோர் அறைக்குள் சென்று தாழ்ப்பாழ் போட்டுவிட்டு பாதுகாப்பாக இருந்தனர்.
வீட்டு ஜன்னல்களின் கண்ணாடிகள், கதவு அடித்துச் சேதப்படுத்தப்பட்டன. விறாந்தையில் விடப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் அடித்துச் சேதப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியும் நேற்று மு.ப.9மணி வரை பொலிஸார் அங்கு வரவில்லையெனவும் கிராம அலுவலர் தெரிவித்தார்.
இதே கும்பல் நேற்று அதிகாலை 5 மணியளவில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக உள்ள கந்தையா வீதியில் உள்ள வீடொன்றின் வெளிக்கதவுகளைத் தாக்கியது.
வீட்டிலிருந்தோர் அருகிலுள்ள வீடொன்றில் தஞ்சமடையவே அங்கு சமையலறைக்குள் புகுந்து அங்கிருந்த போத்தல்களை அடித்து நொறுக்கினர். பின்னர் பெற்றோல் குண்டு வீசித் தாக்கியுள்ளனர்.
வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்ட வீட்டினுள் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் தொலைக்காட்சிப் பெட்டி பூச்சாடிகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன என்று குறித்த வீட்டுப் பெண் தெரிவித்தார்.
பின்னர் நேற்று அதிகாலை 5.30 அளவில் மட்டுவில் தெற்கில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் சென்ற அடாவடிக் கும்பல் வீட்டு வெளிக்கதவை கொத்திச் சேதப்படுத்தியதுடன் அங்கிருந்த பொருள்களையம் அடித்து நொறுக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கிராம அலுவலர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதும், சம்பவ இடத்துக்குப் பொலிஸார் உடனடியாக வரவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அதனால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோருக்கு கிராம அலுவலர் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவர்கள் பொலிஸாரிடம் கேட்டபின்னரே பொலிஸார் கிராம அலுவலரின் வீட்டுக்குச் சென்றிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!