ரணிலின் பதவியை பறிக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதியிழக்கச் செய்யும், உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், யாதுரிமைப் பேராணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்மிளா ரொவீனா ஜயவர்த்தன கோணவல என்ற கொழும்பு மாநகர சபையின், சிறிலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பின் 91(1)(ஈ) பிரிவை மீறியதாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, அரசுத்துறை வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் காசோலை புத்தகங்களை அங்கு அச்சிட்டார் என்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று, ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இடைநிறுத்தி- இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், கோரப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் டிலால் பெரேரா தொடர்ந்த இதுபோன்றதொரு வழக்கில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதையும், மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!