போரின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன வகையான, என்ன இலக்கமுடைய பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்று சாட்சியங்களில் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட விடயங்களைக் காரணமாகக் குறிப்பிட்டு ஆள்கொணர்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு 5 ஆள்கொணர்வு மனு, காணாமற் போனோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்
டது. பின்னர் 7 ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2009 ஆம் ஆண்டு போரின் இறுதியில் இராணுவத்தினரிடம் கையளித்த – சரணடைந்த தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால், சம்பவம் இடம்பெற்ற பகுதி நீதிமன்றமாகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாரர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், பிரதிவாதிகளின் சாட்சியம் பதிவு செய்யும் நடவடிக்கை 2015ஆம் ஆண்டு டிசெம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. முதலில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் மீதான விசாரணையே இடம்பெற்று – முடிவுற்று அதன் அறிக்கைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர்களான விசுவநாதன் பாலந்தினி, கந்தசாமி பொன்னம்மா, ஜெயக்குமாரி ஆகியோர் சார்பில் மூத்த சட்டத்தரணி ரட்ணவேல் முன்னிலையானார். முல்லைத்தீவு நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்ட சில விடயங்கள் மாத்திரம் மன்றில் வாசித்துக் காட்டப்பட்டது.
சாட்சியங்கள் தெளிவில்லை என்று குறிப்பிட்டு மூன்று ஆள்கொணர்வு மனுக்களையும் நிராகரிப்பதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.
‘காணாமல் ஆக்கபட்டோர் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறே வவுனியா மேல் நீதிமன்றத்தினால் கோரப்பட்டிருந்தது. தீர்ப்பு வழங்குவதற்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அதிகாரமில்லை. முல்லைத்தீவு நீதிமன்றின் அறிக்கையின் பிரதியும் வழங்கப்படவேண்டும்’ என்று மனுதாரர் தரப்புச் சட்டத்தரணி ரட்ணவேல் கோரினார்.
மன்று அந்தக் கோரிக்கையை ஏற்றது. பிரதியை வழங்குமாறு உத்தரவிட்டது. வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதேவேளை, முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றபோது, 58ஆவது படைப் பிரிவுக்கு போரின் போது பொறுப்பாக இருந்த சவேந்திர சில்வாவை மன்றில் முற்படுத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக பின்னர் இருந்த மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன, ஆள்கொணர்வு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எவரும் 58 ஆம் படையணியிடம் சரணடைந்ததற்கான பதிவுகள் எதுவும் தங்களிடம் இல்லை என்று முல்லைத்தீவு நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சரணடைந்தவர்கள் தொடர்பாக அவர்களிடமுள்ள பதிவேட்டை மன்றில் சமர்பிக்க மனுதாரர் தரப்புக் கோரியிருந்தது. 58ஆம் படையணியால், மறுவாழ்வளிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலே மன்றில் சமர்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!