கூட்டமைப்பில் நிழல் அமைச்சர்களா?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை என்று ரெலோ அமைப்பின் அரசியல் தலைவரும், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில், சுமந்திரன் உள்ளிட்ட சிலர், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் நிழல் அமைச்சர்களாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “கடந்த 2002 ஆம் ஆண்டு பிரபாகரனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருந்த போதும் நாங்கள் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றினோம். குறிப்பாக அன்று வடக்கில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அத்தோடு குறித்த தினத்தின் பின்னர் சந்திரிக்கா அம்மையார் காலம் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி குறிப்பாக 2010 முதல் அவருடன் 19 கட்ட பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு ஈடுபட்டது.இதனை போன்ற ஒரு செயற்பாடே தற்போதும் இடம்பெற்று வருகின்றதே அன்றி அது நிழல் அமைச்சர்களாக செயற்படுவது என்பது தவறான புரிதல்” என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!