ஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்!!

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை அளித்த அறிக்கையால் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் தான் என உரிமை கோரி பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம் பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘‘ஜெயலலிதாவின் உடலை எங்களது குல வழக்கப்படி இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்ய வேண்டும். எனவே அவரது உடலைத் தோண்டியெடுத்து சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலும் நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்றுக் கொள்ளக்கூடாது என ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா மற்றும் தீபக் ஆகியோரும் இந்த வழக்கில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அரசுத் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இனி இணைப்பு மனுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நாளைக்குள் அப்போலோ நிர்வாகத்திடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தர விட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று அறிக்கை தாக்கல் செய்தது. அப்போலோ மருத்துவமனை சார்பில் அதன் சட்டப்பிரிவு மேலாளர் மோகன் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அவரது அறிக்கையில், ”கடந்த 2016-ம் ஆண்டு செப்.22 முதல் டிசெ.5 வரை 75 நாள்கள் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். சிறப்பு மருத்துவக் குழு தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் இதய நோய் சுவாச சிகிச்சை, கிருமி தொற்று நிபுணர்கள், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை வழங்கினர்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து உணவு துறை பிசியோதரபி நிபுணர்கள் ஆலோசனை வழங்கினார். அவர் இறந்த பிறகு டிசெம்பர் 7-ம் தேதி மருத்துவ சிகிச்சை ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவரிடமிருந்து எடுக்கப்பட்ட உயிரி மாதிரிகள் அனைத்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதே பயன்படுத்தப்பட்டுவிட்டன. மேலும் ரத்தம் மற்றும் சிறுநீரக மாதிரிகளை ஒராண்டுக்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாது. தற்போது அப்போலோவிடம் ஜெயலலிதாவின் உயிரி மாதிரி எதுவும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கக் கோரும் அம்ருதாவின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!