அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் இடையில் உச்சக்கட்டப் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இதனால் நடைபெறவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் மாரப்பனவின் அயலுறவுத்துறை அமைச்சுப் பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு லண்டனில் நடந்தது. அதில் கலந்துகொள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சென்றிருந்தார்.
அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவும் சென்றிருந்தார். எனினும் இருவரும் நேருக்கு நேர் முகங்கொடுத்துப் பேசவில்லையென விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தொடர்பாடல் முடக்கத்தால் பொதுநலவாய உச்சி மாநாட்டுக்கு வருகை தந்த உலக நாடுகளின் தலைவர்களுக்கும் அரச தலைவர் மைத்திரிபாலவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்புகளைக்கூட ஒழுங்கு செய்ய முடியாமற்போனதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றத் தீர்மானம்
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயன்றமைக்குப் பின்னணியில் சட்ட ஆலேசனைகளை வழங்கியவர் மாரப்பனவே என்கிற சந்தேகம் அரச தலைவருக்கு ஏற்பட்டுள்ளமையே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூத்த சட்ட வல்லுநரான அமைச்சர் திலக் மாரப்பன இதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தார் என்ற உளவுத் தகவல் மைத்திரியின் காதுகளுக்குச் சென்றதை அடுத்தே அவர் நாடாளுமன்ற அமர்வை ஒத்தி வைத்தார் என்றும் கூறப்படுகின்றது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!