புதிய அரசமைப்பு ஊடாக அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கு இடையில் அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் 20ஆவது திருத்தத்தை அதன் தற்போதைய வடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்காது என்று தெரிகின்றது.
நிறைவேற்று அரச தலைவர் முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்கிற கட்சியின் கொள்கையில் மாற்றம் இல்லை என்றபோதும் அரசியல் தீர்வு, தேர்தல் முறை மாற்றம் என்பவற்றைவிட்டுவிட்டு அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டும் ஒழிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
‘‘அரசியல் தீர்வு, நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை ஒழிப்பு, தேர்தல் முறை ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் அரசமைப்புப் பேரவை ஏற்கனவே ஆராய்ந்தது. இதில் ஒன்றை மாத்திரம் எடுத்துச் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. முக்கியமான பிரச்சினைகளுக்குச் சேர்த்தே தீர்வு காணவேண்டும். அதற்காக நாங்கள் இதனை எதிர்கின்றோம் என்று சொல்ல முடியாது’’ என்சுறார் மந்திரன்.
நிறைவேற்று அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டவரைவு ஒன்று நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று உதயன் கேள்வி எழுப்பியது அதற்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:
20ஆவது திருத்தச் சட்டவரைவில் நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பை பற்றி மாத்திரம்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் அரசுக் கட்சியின் 2014ஆம் ஆண்டு மாநாட்டிலேயே நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
எமது அந்தக் கொள்கை நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை.
1978ஆம் ஆண்டுதான் நிறைவேற்று அரச தலைவர் முறைமை கொண்டு வரப்பட்டது. ஆனால் மிகப் பெரிய பிரச்சினையான இனப் பிரச்சினை 1948ஆம் ஆண்டிலிருந்தே தொடர்கின்றது. இனப் பிரச்சினையால்தான் பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையால் யாரும் உயிரிழக்கவில்லை. அதற்காக நிறைவேற்று அதிகார முறைமையை அகற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. அதை ஆதரிப்போம் என்று சொன்னாலும் அதைத் தனித்துச் செய்வது சரியானதல்ல.
அரசமைப்பு பேரவையில்கூட நிறைவேற்ற அதிகார முறைமை ஒழிப்புக் குறித்துப் பேசப்பட்டது. அரசியல் தீர்வு, நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமையை ஒழித்தல், தேர்தல் முறை ஆகிய மூன்றும் ஒரேயடியாக நடைபெற்றாக வேண்டும். இதில் ஒன்றை மாத்திரம் எடுத்துச் செய்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. முக்கியமான பிரச்சினைகளுக்குச் சேர்த்தே தீர்வு கண்டாக வேண்டும் – – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!